சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. ஒரு சொத்து சட்டப்படி உங்களுக்குத்தான் சொந்தம் என்பதை நிரூபிக்கும் அசைக்க முடியாத ஆதாரம் தான் தாய் பத்திரம்.
விற்பனை, வாங்குதல், வங்கி கடன், பட்டா மாற்றம் என எந்தவொரு முக்கிய காரியத்திற்கும் இந்த அடிப்படை ஆவணம் தான் முதல் சாட்சியாக நிற்கிறது. சொத்தின் ஆதி அந்தத்தை, அதாவது அதன் முதல் உரிமையாளர் யார் என்பதில் தொடங்கி அது கைமாறி வந்த கதையை துல்லியமாக காட்டும் இந்த சொத்து ஆதாரம் ஒருவேளை தொலைந்து போனால், அது நில உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சட்ட சிக்கல்களையும் உருவாக்கிவிடுகிறது.
இப்போது தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை STAR 3.0 போன்ற அதிநவீன திட்டங்கள் மூலம் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஈஸியாக பல சேவைகளை ஆன்லைனில் பெற்று வருகிறார்கள். இருந்தாலும் பல ஆண்டுகள் பழமையான தாய் பத்திரம் தொலைந்துவிட்டால், அதை சட்டப்பூர்வமாக மீட்டெடுப்பது எப்படி என்ற குழப்பம் பலரிடமும் நீடிக்கிறது. தொலைந்த பத்திரத்தை மீண்டும் உங்கள் கைகளுக்கு கொண்டு வர ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வழிகளில் அரசு தற்சமயம் நடைமுறைகளை வகுத்துள்ளது. பதிவு செய்யப்பட்ட பத்திர எண், பதிவு செய்யப்பட்ட ஆண்டு, மற்றும் பதிவு அலுவலகம் (SRO) போன்ற விவரங்கள் உங்கள் வசம் இருந்தால், ஆன்லைன் மூலம் மிக எளிதாக சான்றளிக்கப்பட்ட நகலைப் பெற முடியும். இதற்காக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnreginet.gov.in என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அதில் உள்ள 'Certified Copy / View Document' என்ற பிரிவை கிளிக் செய்து, உங்கள் சொத்து அமைந்திருக்கும் மாவட்டம், சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகம், பத்திர எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆண்டு ஆகியவற்றை துல்லியமாக உள்ளிட வேண்டும். பிறகு Search அப்ஷனை அழுத்தி, Apply for Certified Copy என்பதைத் தேர்வு செய்து, அதற்கான அரசு கட்டணத்தை ஆன்லைனியே செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தப்பட்டவுடன், சான்றளிக்கப்பட்ட பத்திர நகலை பிடிஎஃப் வடிவில் உங்கள் கம்ப்யூட்டரிலேயே டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆனால், இதில் ஒரு பெரிய சிக்கல் உள்ளது.. சுமார் 100 அல்லது 200 வருடங்களுக்கு முந்தைய மிகவும் பழமையான தாய் பத்திரங்கள் பல நேரங்களில் ஆன்லைனில் எளிதாகக் கிடைப்பதில்லை. இத்தகைய பழங்கால ஆவணங்களை மீட்டெடுக்க நாம் பாரம்பரிய ஆஃப்லைன் மற்றும் சட்டப்பூர்வ வழிமுறைகளைத்தான் நாட வேண்டியிருக்கும். இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? முதலில், தாய் பத்திரம் எந்தப் பகுதியில் தொலைந்ததோ, அந்தப் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பத்திரத்தின் முழு விவரங்களையும் குறிப்பிட்டு "பத்திரம் காணவில்லை" என்று உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும். புகாரைப் பெற்றுக்கொண்டதற்கான ரசீதை காவல் அதிகாரியின் கையொப்பம் மற்றும் காவல் நிலைய முத்திரையுடன் பத்திரமாக வாங்க வேண்டும். போலீசார் உங்கள் பத்திரத்தைத் தேடியும் கிடைக்காத பட்சத்தில், முறைப்படி எப்ஐஆர் பதிவு செய்யப்படும். தொடர்ந்து நடத்தப்படும் விசாரணைக்குப் பிறகு, காணாமல் போன ஆவணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல்துறை தரப்பில் Non Traceable சான்றிதழ் வழங்கப்படும். இந்த சர்டிபிகேட் கிடைத்ததும், ஒரு தகுந்த வழக்கறிஞரை அணுக வேண்டும். "குறிப்பிட்ட சொத்தின் அசல் பத்திரம் தொலைந்துவிட்டது, அதை கண்டெடுப்பவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும், தவறினால் நகல் பத்திரம் பெறப்படும்" என்ற பொது அறிவிப்பை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் முன்னணி நாளிதழ்களில் வழக்கறிஞர் மூலம் விளம்பரமாக வெளியிட வேண்டும். விளம்பரம் வெளியாகி 15 நாட்களுக்குள் எந்தவிதமான தகவலும் வராவிட்டால், வழக்கறிஞர் அதற்கான சான்றிதழை உங்களுக்கு வழங்குவார்.. கடைசியாக, நோட்டரி உறுதிமொழிப் பத்திரம், பத்திரிகை விளம்பர நகல், போலீஸ் புகார் மனு, எப்ஐஆர் நகல், மற்றும் காவல்துறையின் சான்றிதழ் ஆகிய 5 முக்கிய ஆவணங்களையும் சார் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, அசல் பத்திரத்திற்கு இணையான சட்டப்பூர்வ நகல் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆவணங்கள் அனைத்தும் கையில் இருந்தால் மட்டுமே, எதிர்காலத்தில் சொத்து பரிமாற்றங்களின் போது எந்தவொரு சட்ட சிக்கலும் எழாமல் தப்பிக்க முடியும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.ஒரிஜினல் பத்திரத்தின் அவசியம்
தொலைந்த தாய் பத்திரம்
சட்டப்பூர்வ வழிமுறைகள் என்னென்ன
5 முக்கிய ஆவணங்கள்