சென்னை: சென்னை திருவிக நகர் தொகுதிக்குள்பட்ட பள்ளியில் குத்துவிளக்கேற்றிய போது ப்ரோட்டோகால் மீறப்பட்டதாக தவெக எம்எல்ஏ பல்லவி கொடுத்த புகாரை ஆராய்ந்ததில் அப்படி எந்த ப்ரோட்டோகாலும் மீறப்படவில்லை என்பதால் அந்த புகார் மீது மேல் நடவடிக்கை தேவையில்லை என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் சபாநாயகர் பிரபாகர் பேசுகையில், "உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் மரபு நெறிமுறைகள் குறித்து முக்கியமான விஷயம்... எல்லாருக்காகவும், நம்ம எல்லாருக்காகவும் இதை நான் படிக்கிறேன்; நான் உட்பட எல்லாருக்காகவும்.
கடந்த 04-06-2026 அன்று (வியாழக்கிழமை அன்று) திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், புதிய கட்டடத் திறப்புவிழா நிகழ்ச்சியின் போது, குத்துவிளக்கு ஏற்றுவது தொடர்பான மரபு நெறிமுறை (Protocol) மீறப்பட்டதாகத் திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதி பேரவை உறுப்பினர் மோ. ரா. பல்லவி ஒரு மனுவினை என்னிடம் அளித்தார். அந்த மனுவினை நான் நன்கு படித்துப் பார்த்து ஆய்வு செய்தேன். அதுகுறித்த சில கருத்துக்களையும், அறிவுறுத்தல்களையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். சட்டசபைக்கென உள்ள கண்ணியத்தினையும், மாண்புகளையும் மற்றும் சட்டமன்றப் பேரவை உறுப்பினருக்கு என உள்ள சிறப்புரிமைகளையும், மரபு நெறிமுறைகளையும் (Protocol) காப்பதும், செயல்படுத்துவதும் சட்டமன்றப் பேரவைத் தலைவராக எனது பொறுப்பும் மற்றும் கடமையும் ஆகும். அரசால் வெளியிட்டுள்ள மரபு நெறிமுறைகளின் படி (Protocol), அரசமைப்புத் தலைவர்கள் முதல் முக்கியப் பிரமுகர்கள் வரை உள்ள ஒவ்வொருவரின் நிலைக்கு ஏற்ப முன்னுரிமை வரிசை முறை (Warrant of Precedence) அமைக்கப்பட்டுள்ளது. இந்த முன்னுரிமை வரிசைப்படி சட்டமன்ற உறுப்பினர்களும், அரசுத்துறை உயர் அலுவலர்களும் தங்கள் கடமைகளையும், பொறுப்புகளையும் மற்றும் அதிகாரத்தையும் நன்கு உணர்ந்து, அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். திரு.வி.க நகர் தொகுதியில், அந்தப் பள்ளிக்கட்டடத் திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்ற நிகழ்வு, மரபு நெறிமுறை குறித்த புரிதல் இல்லாமல், தெரிந்தோ தெரியாமலோ அல்லது அறிந்தோ அறியாமலோ நடந்த அந்த நிகழ்வு இனிவரும் காலங்களில் தொடராது என நம்புகிறேன். அதனால், அந்த மனுவின் மீது மேல் நடவடிக்கை தேவையில்லை எனக் கருதுகிறேன். உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதோ அல்லது வேறு வகையில் நடவடிக்கை எடுப்பதோ தேவையில்லை என்று கருதுகிறேன். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மற்றும் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்வுகளிலும், மரபு நெறிமுறைப்படி (Protocol) அந்தத் தொகுதியைச் சார்ந்த சட்டசபை உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டு, சட்டசபை உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் மரபு நெறிமுறைகளைக் கடைபிடிக்க... நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த அலுவலர்களுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு மதிப்பிற்குரிய அரசு தலைமைச் செயலாளர் அவர்களுக்கு உத்தரவிடுகிறேன். மேலும், இந்த முன்னுரிமை வரிசை (Warrant of Precedence) தொடர்பான தமிழக அரசின் அரசாணை நகல், சட்டமன்ற உறுப்பினர்களின் மேசையில் வைக்கப்படும்." என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் நடந்தது குறித்து ஏற்கெனவே மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார். அதாவது எம்எல்ஏ பல்லவி அவமதிக்கப்படவில்லை. பள்ளி கட்டட திறப்பு நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் மாநகராட்சி சார்பில் பல்லவியை அழைத்தோம். அவர் எங்களுடன்தான் ரிப்பனை வெட்டினார். ஆனால், அரசு நிகழ்ச்சிகளில் புரோட்டோகால் படி மேயர் விளக்கேற்றியதும் ஐஏஎஸ் அதிகாரிகள் தான் முதலில் குத்துவிளக்கை ஏற்ற வேண்டும். அதற்குப் பின்பே எம்.எல்.ஏ ஏற்ற வேண்டும். அதன் பிறகு சேர்மேன், இந்த வரிசை பல்லவிக்கு தெரியாமல் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார் என பிரியா விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.உறுப்பினர்களின் சிறப்பு உரிமைகள் மற்றும் மரபு நெறிமுறைகள் குறித்த குறிப்புரைகள்: