பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்!


  • சென்னை: தமிழ்நாடு முதல்வர் விஜய்யை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ராஜ்யசபா சீட் தொடர்பாக பேசப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

    Advertisement

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு உருவான அரசியல் சூழலில், தவெக தலைமையிலான ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், தேர்தலுக்குப் பிறகு தவெக கூட்டணியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

    Advertisement

    அதன் தொடர்ச்சியாக, புதிய அமைச்சரவையில் காங்கிரஸுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் பி.விஸ்வநாதன் மற்றும் எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதன் மூலம் ஆட்சியில் நேரடி பங்கேற்பை காங்கிரஸ் உறுதி செய்தது.

    காங்கிரஸ்

    இந்த நிலையில், தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக ப.சிதம்பரம் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பும் ப.சிதம்பரம் பல முக்கிய அரசியல் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியிருந்தார். குறிப்பாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டபோது, நேரடியாக தலையிட்டு பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிக்க உதவியவர் என்ற பெயரை பெற்றிருந்தார்.

    Advertisement

    முதல்வர் விஜய்

    அப்படிப்பட்ட சூழலில், தற்போது ஆட்சியில் உள்ள முதல்வர் விஜய்யை அவர் நேரில் சந்தித்திருப்பது பல்வேறு அரசியல் யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்த சந்திப்பின்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் தற்போது காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

    மாநிலங்களவை இடம்

    மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், தவெக தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதனால் அந்த இடம் யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாக கூறப்படுகிறது. ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் முக்கிய கூட்டணி கட்சியாக இருப்பதால், மாநிலங்களவை இடம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    திமுக கூட்டணி

    ஏற்கனவே கடந்த காலத்தில் திமுக கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸ் ஒரு மாநிலங்களவை இடத்தை பெற்றிருந்தது. மேலும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தல்களிலும் கூடுதல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற விருப்பத்தை கட்சி தலைமையினர் வெளிப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில், ப.சிதம்பரத்தின் நேரடி சந்திப்பு மாநிலங்களவை தேர்தலை மையமாகக் கொண்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    ப.சிதம்பரம் - விஜய்

    அதேநேரத்தில், இந்த சந்திப்பு முழுக்க முழுக்க அரசியல் ஆலோசனை மட்டுமே என்றும், மாநில அரசின் செயல்பாடுகள் மற்றும் கூட்டணி உறவு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
    எனினும், இந்த சந்திப்பு குறித்து முதல்வர் அலுவலகமோ, காங்கிரஸ் தரப்போ அதிகாரப்பூர்வமாக எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. இதனால் சந்திப்பின் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து பல்வேறு யூகங்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன. மாநிலங்களவை தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், ப.சிதம்பரம் - விஜய் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    P. Chidambaram’s meeting with CM Vijay sparks speculation over Rajya Sabha seat allocation and Congress-TVEK political ties.