சென்னை: தமிழறிஞர் நெல்லை கண்ணன் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பற்றி ஒருமையிலும், சர்ச்சைக்குரிய வகையிலும், மேலப்பாளையம் பொதுக் கூட்டத்தில் நெல்லை கண்ணன் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நெல்லை கண்ணனை கைது செய்ய, பாஜகவினர் தீவிர போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, கடந்த 1ம் தேதி இரவு பெரம்பலூரிலுள்ள விடுதியில் அவர் கைது செய்யப்பட்டார். மதுரையிலிருந்து, சிகிச்சைக்காக சென்னை சென்ற வழியில், அவர் பெரம்பலூரில் தங்கியிருந்தபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் மீது நேற்று 153 (ஏ) இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுதல், 506 (1) கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மேலும், இரு பிரிவுகள் நெல்லை கண்ணன் மீது கூடுதலாக சேர்க்கப்பட்டது. இதனிடையே நெல்லை கண்ணன், பாளையங்கோட்டை சிறையிலிருந்து, சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். 13ம் தேதிவரை அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். 24 மணி நேரத்திற்குள் சுமார் 750 கி.மீ தூரம் அவர் அலைக்கழிக்கப்பட்டதாக ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி, நெல்லை கண்ணன் சார்பாக நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.