தமிழில் 34 பேர் தான் 100க்கு 100.. அறிவியலில் தான் அறிவு அதிகம் போல! எத்தனை பேர் செண்டம் தெரியுமா?


  • சென்னை: தமிழகத்தில் 2026ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்தாண்டும் மாணவியர்கள் தேர்ச்சியில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பல பாடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ் பாடத்தில் 34 பேரும், ஆங்கிலத்தில் 92 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    Advertisement

    இந்தாண்டு தேர்வுகள் மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற்றன. தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

    Advertisement

    மொத்தம் 8 லட்சத்து 70 ஆயிரத்து 643 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.31 சதவீதமாக பதிவாகியுள்ளது.

    மாணவியர்கள் இந்தாண்டும் மாணவர்களை விட அதிக தேர்ச்சி பெற்று முன்னிலை வகித்துள்ளனர். தேர்வு எழுதிய 4,35,247 மாணவியர்களில் 4,19,891 பேர் தேர்ச்சி பெற்று 96.47 சதவீத தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளனர்.

    அதேபோல், 4,35,396 மாணவர்களில் 4,01,214 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.15 சதவீதமாக உள்ளது. இதன்மூலம் மாணவர்களை விட மாணவியர்கள் 4.32 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    Advertisement

    பாட வாரியான தேர்ச்சி விகிதத்திலும் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தமிழ் பாடத்தில் 98.43 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 99.44 சதவீதம் பேரும், கணிதத்தில் 97.36 சதவீதமும், அறிவியலில் 97.93 சதவீதமும், சமூக அறிவியலில் 98 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்தாண்டு பொதுத்தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கவனம் ஈர்த்துள்ளது. தமிழ் பாடத்தில் 34 பேரும், ஆங்கிலத்தில் 92 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    கணிதத்தில் 3,194 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 10,476 மாணவர்களும், சமூக அறிவியலில் 3,336 மாணவர்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    Advertisement

    மொத்தமாக ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 17,132 ஆக உள்ளது. இதில் அரசு பள்ளி மாணவர்களே 2,774 பேர் இருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

    மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 97.57 சதவீத தேர்ச்சி பதிவாகியுள்ளது. இரண்டாவது இடத்தில் சிவகங்கை மாவட்டம் 97.54 சதவீதத்துடன் உள்ளது.

    அடுத்ததாக தஞ்சாவூர் 97.41 சதவீதம், திருச்சி 97.31 சதவீதம், கன்னியாகுமரி 97.30 சதவீதம் தேர்ச்சி பெற்று முதல் 5 இடங்களில் உள்ளன.

    அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு 97.42 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    Advertisement

    புதுக்கோட்டை 97.09 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், தஞ்சாவூர் 96.89 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இராமநாதபுரம் 96.78 சதவீதமும், திருச்சி 96.48 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    மாற்றுத் திறனாளி மாணவர்களும் இந்தாண்டு குறிப்பிடத்தக்க அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 13,292 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 11,416 பேர் தேர்ச்சி பெற்று 85.89 சதவீத தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளனர்.

    அதேபோல், சிறைவாசிகளும் தேர்வில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். 370 சிறைவாசிகள் தேர்வு எழுதிய நிலையில், 354 பேர் தேர்ச்சி பெற்று 95.68 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    Advertisement

    தனித்தேர்வர்களில் 24,353 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 8,744 பேர் தேர்ச்சி பெற்று 35.91 சதவீத தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.

    இந்தாண்டு பொதுத்தேர்வு முடிவுகளில் அரசு பள்ளிகளின் முன்னேற்றம், மாணவியர்களின் ஆதிக்கம் மற்றும் அறிவியல் பாடத்தில் அதிகளவில் நூறு மதிப்பெண்கள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சங்களாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Tamil Nadu SSLC results saw 10,476 students score full marks in Science while only 34 secured centum in Tamil.