சென்னை: பாஜகவில் இருந்து விலகியுள்ள அண்ணாமலை இப்போது புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே அண்ணாமலை தொடங்கியுள்ள அரசியல் கட்சி, பாஜகவின் இன்னொரு முகமாக இல்லாமல்.. புதிய முகமாகத் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இருந்தால் அதை வரவேற்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். சில மாதங்களாகவே அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில், இன்று அவர் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இருந்து விலகியுள்ளார். கடந்த சில நாட்களாகவே இது தொடர்பாக டெல்லியில் முகாமிட்டிருந்த அண்ணாமலையின் பாஜக விலகல் இன்று உறுதியானது.
மேலும், அவர் கையோடு புதிய இயக்கத்தையும் ஆரம்பித்துள்ளார். "We The Leaders" என்ற இயக்கத்தை அண்ணாமலை தொடங்கியுள்ளார். இதில் வெறும் சில மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். சாமானிய மக்களை மையமாகக் கொண்ட ஒரு மாற்றுப் பிராந்தியக் கட்சியைத் தொடங்கும் ஒரு முன்னெடுப்பாகவே முதலில் இந்த அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அண்ணாமலை அரசியல் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும், "பாஜக முகத்தோடு இங்கே வந்தவர் அண்ணாமலை. பாஜகவுக்கு தமிழ்நாட்டிலே இடமில்லை என்பதை மீண்டும் இந்த தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உறுதிப்படுத்தி விட்டார்கள். எனவே, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் வேறு முழக்கங்களோடு அண்ணாமலை களம் காண விரும்புகிறார் என்று நான் கருதுகிறேன். பாஜகவின் இன்னொரு முகமாக இல்லாமல், அது முற்றிலும் புதிய முகமாக, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிற முகமாக, மாநில உரிமைகள், மொழி உரிமைகள், இன உரிமைகள் உள்ளிட்ட தனித்துவத்தைப் பாதுகாக்கக்கூடிய ஒரு அரசியல் முகமாக இருக்குமேயானால், மகிழ்ச்சியோடு அதனை வரவேற்கிறோம்" என்று அவர் தெரிவித்தார். பாஜகவுக்கும் அண்ணாமலைக்கும் இடையே கடந்த 18 மாதங்களாக நிலவி வந்த அதிருப்தியே அவரது விலகலுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் ஒரு தேசியக் கட்சி தனித்து ஆதிக்கம் செலுத்துவதற்கான அரசியல் களம் இப்போதைக்குக் குறைவாகவே இருப்பதாக அண்ணாமலை கருதியுள்ளார். இதன் காரணமாகவே தனி அரசியல் பாதையை நோக்கிப் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கையை முன்வைத்தார். பாஜகவிலிருந்து வெளியேறிய கையோடு, "We The Leaders" என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். புதிய தலைமுறையினரையும் இளைஞர்களையும் அரசியலை நோக்கித் தன்பக்கம் ஈர்க்கும் புதிய பயணத்தை ஆரம்பித்து இருக்கிறார்.அண்ணாமலை
திருமாவளவன்
அதிருப்தி