வேலையைக் காட்டிய விஜய்! டோட்டலா 245 கோடி கட்.. திமுக திட்டங்களுக்கு மூடுவிழா நடத்திய தவெக அரசு!


  • சென்னை: தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு, இன்னும் பணிகள் தொடங்கப்படாத ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 கட்டுமானத் திட்டங்களுக்கான நிர்வாக ஒப்புதல்களை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு எடுத்துள்ள இந்த முடிவு அரசியல் மற்றும் கோயில் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பல்வேறு துறைகளில் முந்தைய அரசின் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட இருந்த சில பெரிய கட்டுமானத் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

    Advertisement

    அதன் அடிப்படையிலேயே தற்போது 46 திட்டங்களுக்கான நிர்வாக அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்தம் ரூ.245.85 கோடி மதிப்பிலான திட்டங்கள் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளன.

    விஜய் அரசு

    இதில் ரூ.115.77 கோடி மதிப்பிலான 29 திருமண மண்டப கட்டுமானத் திட்டங்களும், ரூ.130.08 கோடி மதிப்பிலான 17 வணிக வளாக கட்டுமானத் திட்டங்களும் அடங்குகின்றன. இந்த திட்டங்கள் அனைத்தும் அறிவிக்கப்பட்டிருந்தாலும், எந்த திட்டத்திலும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், சில திட்டங்கள் நீதிமன்ற வழக்குகளில் சிக்கியிருந்ததாகவும், சில திட்டங்கள் கோயில்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடியதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    கோயில் திட்டங்கள்

    குறிப்பாக, பக்தர்கள் செலுத்தும் காணிக்கைத் தொகைகள் மற்றும் கோயில் நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து அரசு புதிய கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோயில் வருவாய்கள் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, கோயில்களின் பராமரிப்பு, திருப்பணிகள், ஆன்மிக வளர்ச்சி மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    திமுக திட்டங்கள்

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "கோயில்களின் முக்கிய நோக்கம் ஆன்மிக சேவையே. அதனால் கோயில் நிதிகள் நேரடியாக பக்தர்களுக்கும், கோயில்களின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும். இன்னும் தொடங்கப்படாத திட்டங்கள் என்பதால் அவற்றை மறுஆய்வு செய்து ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    திருப்பணி

    மேலும், இந்த திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் மிச்சமாகும் ரூ.245.85 கோடி நிதியை கோயில்களின் தூய்மை பராமரிப்பு, பழமையான கோயில்களின் திருப்பணிகள், குடிநீர் வசதி, பக்தர்களுக்கான ஓய்வு மண்டபங்கள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக மற்றும் பொதுநலத் திட்டங்களுக்கு பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கோயில் நிதி

    இந்நிலையில், திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விஜய் அரசு ரத்து செய்திருப்பது அரசியல் ரீதியாகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே நேரத்தில், கோயில் நிதிகளை கோயில்களின் வளர்ச்சிக்கே பயன்படுத்த வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் எழுந்து வருகின்றன. அடுத்த கட்டமாக இந்த நிதி எந்தெந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் என்பது குறித்து பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    English Summary

    Tamil Nadu government scraps 46 HR&CE projects worth Rs 245.85 crore, reallocating funds for temple renovation and pilgrim facilities.