3 கிமீ மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய்.. ஆதவ் அர்ஜுனா சொன்னது சரியா? உண்மை என்ன?


  • சென்னை: இந்தியாவிலேயே ஒரு மராத்தான் போட்டியில் 3 கிமீ ஓடிய முதல் முதல்வர் விஜய் தான் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசி இருக்கிறார். இந்த வீடியோ தவெகவினர் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வரும் சூழலில், அதன் உண்மைத்தன்மை குறித்த விவாதம் எழுந்துள்ளது. அது உண்மையா, பொய்யா என்பதை பார்க்கலாம்.

    Advertisement

    சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் Start Run, Stop Drugs என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. விழிப்புணர்வு வாசகப் பலகையில் கையெழுத்திட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

    Advertisement

    இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பின்னர் காமராஜர் சாலையில் அண்ணா நினைவிடத்தில் இருந்து விழிப்புணர்வு ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தத முதல்வர் விஜய், அவரும் பங்கேற்றார். கண்ணகி சிலை வரை சென்று U turn எடுத்து மீண்டும் அதே சாலையில் 6 கிலோமீட்டர் தூரம் நடந்த மராத்தான் ஓட்டம், தீவுத்திடலில் நிறைவு பெற்றது.

    இதில் சுமார் 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த மராத்தான் போட்டியில் விஜய் பங்கேற்றது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், இதுவரை இருந்த முதல்வர்களிலேயே மராத்தான் போட்டிகளில் பங்கேற்று 3 கிமீ ஓடிய இந்தியாவின் ஒரே முதல்வர் ஜோசப் விஜய் தான் என்று தெரிவித்தார்.

    Advertisement

    ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு சோசியல் மீடியாவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்தியாவிலேயே 3 கிமீ மராத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய் என்று ஆதவ் அர்ஜுனா பேசியது உண்மை அல்ல. இதற்கு முன்பாக 2024ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா 21 கிமீ மாரத்தான் போட்டியில் பங்கேற்று நிறைவு செய்துள்ளார்.

    54 வயதான உமர் அப்துல்லா 21 கிமீ தூரத்தை சுமார் 1.50 மணி நேரத்தில் நிறைவு செய்தார். அதற்கு முன்பாக 13 கிமீ மாரத்தான் போட்டியிலும் உமர் அப்துல்லா பங்கேற்று இருக்கிறார். அதேபோல் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தொடர்ச்சியாக மராத்தான் போட்டிகளில் பங்கேற்பவர்.

    Advertisement

    கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உட்பட பல்வேறு முதல்வர்களும் மராத்தான் போட்டிகளில் பங்கேற்கும் வழக்கம் கொண்டவர்கள். இதனால் இந்தியாவிலேயே 3கிமீ மாரத்தான் போட்டிகளில் ஓடிய முதல் முதலமைச்சர் விஜய் என்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு பொய் என்று தெரிய வந்துள்ளது.

    English Summary

    Vijay: Only CM to Run a Marathon, Fact-Checking Minister Aadhav Arjuna's Statement on CM Vijay's Anti-Drug Run