சென்னை: மீன் பிரியர்களின் எக்காலத்து ஃபேவரிட் லிஸ்ட்டில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது விரால் மீன் தான். ஏரி, குளம் என நன்னீரில் துள்ளிக்குதித்து வளரும் இந்த விரால் மீனை தேடிப்பிடித்து வாங்கி சமைப்பவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட விரால் மீனில் என்னென்ன நன்மைகள் ஒளிந்திருக்கின்றன, இதனை யார் யாரெல்லாம் சாப்பிட வேண்டும், எதற்காக சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
விரால் மீனை ஏன் இவ்வளவு தூரம் கொண்டாடுகிறார்கள் என்றால், அதற்குப் பின்னால் இருக்கும் அசாத்தியமான மருத்துவக் குணங்கள் தான் காரணம்.
இதில் கொழுப்பு சத்து மிக மிகக் குறைவு, அதேநேரத்தில் உயர்தர புரதச்சத்து அள்ளியள்ளிக் கொட்டிக் கிடக்கிறது. உடலை ஃபிட்டாக வைத்திருக்க நினைப்பவர்களுக்கும், தசை வளர்ச்சியை எதிர்பார்ப்பவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பொதுவாகவே அசைவ உணவுகளில் கொழுப்பு கூடிவிடும் என்ற பயம் இருக்கும், ஆனால் விரால் மீனில் அந்த பயமே தேவையில்லை. இதிலிருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் ஒரு கேடயம் போல செயல்படுகிறதாம்.. மாரடைப்பு போன்ற இதய நோய்கள் அண்டாமல் தடுக்க இந்த சத்துக்கள் பெரிதும் உதவுகின்றன. இந்த விரால் மீன் யாருக்கெல்லாம் ரொம்ப நல்லது தெரியுமா? ஆபரேஷன் செய்துகொண்டவர்களும், பிரசவித்த தாய்மார்களும்தான் டாப்பில் முதலிடத்தில் இருக்கிறார்களாம். காரணம் உடலில் ஏற்படும் காயங்களை மிக வேகமாக ஆற்றும் குணம் விரால் மீனுக்கு உண்டு. இதில் உள்ள அல்புமின் என்கிற புரதம், உடலில் உள்ள திசுக்களை விரைவாக புதுப்பிக்க உதவுகிறது. அதனால் தான் கிராமப்புறங்களில் ஏதாவது காயம் ஏற்பட்டாலோ அல்லது ஆபரேஷன் செய்துகொண்டாலோ, உடனே விரால் மீன் குழம்பு செய்து கொடுக்க வேண்டும் என்று பெரியவர்களே சொல்வார்களாம். அதுமட்டுமில்லாமல், வளரும் குழந்தைகளுக்கு இந்த மீனை தாராளமாகக் கொடுக்கலாம். அவர்களின் மூளை வளர்ச்சிக்கும், கூர்மையான ஞாபக சக்திக்கும் இது செம்ம பூஸ்ட்டாக அமையும். வயதானவர்களுக்கும், மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கும் விரால் மீன் ஒரு அருமருந்து. வயது முதிர்வால் ஏற்படும் எலும்புத் தேய்மானத்தைத் தடுத்து, மூட்டுகளுக்கு வலுசேர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு. அதேபோல், அடிக்கடி சளி, இருமலால் அவதிப்படுபவர்கள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மீனை சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பலமடங்கு அதிகரிக்கும். உடலை எப்போதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க நினைக்கும் நடுத்தர வயதுடையவர்களும் தாராளமாக இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மொத்தத்தில் விரால் மீனை நாம் ஏன் சாப்பிட வேண்டும் என்றால், அதற்கு ஒரே பதில் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் தான். இன்றைய காலகட்டத்தில் நாம் சந்திக்கும் மன அழுத்தம், சோர்வு போன்ற அத்தனைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க இந்த மீன் உதவும். ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடலின் நரம்புகளுக்கு புத்துயிர் கொடுக்கும் வல்லமை இதற்கு உண்டு. வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது விரால் மீனை உணவில் சேர்த்துக்கொண்டால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் செலவை மிச்சப்படுத்தலாம் என்பது மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை...!!