சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கானத்தூர் பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கார் ஒன்று மிக அதிவேகமாகச் சென்றுள்ளது. அந்த கார் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் அதிவேகமாகச் சென்றது. இதனை கண்ட பொதுமக்கள் துரத்திப் பிடித்து ஓட்டுநருக்கு தர்மஅடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் எப்போதுமே கார்கள் அதிவேகத்தில் தான் செல்லும், சிலர் கிழக்கு கடற்கரை சாலையை அதிவேகமாக ரேஸ் செல்வதற்காவும் பயன்படுத்துகிறர்கள். பனையூர் தாண்டினால் வாகனங்கள் மின்னல் வேகத்தில் தான் செல்லும். 150, 200 கிமீ வேகத்தில் கூட பல வாகன ஓட்டிகள் செல்வதை காண முடியும். அப்படி ஒரு வாகன ஓட்டி அதிவேகமாக சென்ற நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் விபத்திற்கு பின்னரும் வாகனத்தை நிறுத்தாமல் வாகன ஓட்டி தப்பினார். ஆனால் அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர் . இதுபற்றி விரவாக பார்ப்போம்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கானத்தூர் பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கார் ஒன்று மிக அதிவேகமாகச் சென்றுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையில் சென்ற ஆட்டோ மற்றும் பைக்குகள் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது. வாகனங்கள் மீது மோதிய பிறகும், காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்தாமல் விபத்து நடந்த இடத்தில் இருந்து அதிவேகமாக தப்பிச் செல்ல முயன்றார். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் காரை விடாமல் பின்தொடர்ந்து துரத்தினர். இறுதியாக ஈஞ்சம்பாக்கம் அருகே காரை பொதுமக்கள் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.காரை நிறுத்தியதும், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும், காரை இயக்கிய 38 வயது மதிக்கத்தக்க நபரை கீழே இறக்கி பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். காரில் அவருடன் இரண்டு பெண்களும் இருந்ததாகத் தெரிகிறது. பொதுமக்கள் மூவரையும் பிடித்து வைத்தனர். இந்த பயங்கர விபத்தில் படுகாயமடைந்த பலரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நீலாங்கரை காவல் துறையினர், விபத்து ஏற்படுத்திய காரையும், காரை ஓட்டி வந்த நபர் மற்றும் உடன் இருந்த பெண்களையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். கார் ஓட்டுநர் மதுபோதையில் இருந்தாரா? அல்லது விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து நீலாங்கரை போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது கார் மோதி, ஓட்டுநருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் சில மணி நேரம் பெரும் போக்குவரத்து நெரிசலையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.