சென்னை: சென்னை ஆதம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாகவே எழுந்து வருகிறது. அந்த ரயில் நிலையத்தில் இருந்த சிக்கல் என்ன என்பது குறித்து தற்போது அதிகாரிகள் முக்கிய விளக்கம் ஒன்றை தந்துள்ளனர்.. அத்துடன் ஆதம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற அப்டேட்டையும் கொடுத்துள்ளனர். இதுகுறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
சென்னை போக்குவரத்து என்றாலே முதலில் கண்முன் நிற்பது பறக்கும் ரெயில் திட்டம்தான்.. இதுதான் சென்னைக்கே முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறது.. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரெயில் சேவை, மாநகரின் பயணிகளை இணைக்கும் முக்கியமான இணைப்பாக இருந்து வருகிறது.
இந்த இணைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய வழித்தடத்தை அமைக்கும் திட்டம் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் எழுந்த சிக்கல்களால் இந்த திட்டம் அப்படியே நீண்ட காலமாக இழுபறியிலேயே கிடந்தது.. பல வருஷமாக முடங்கிப் போன இந்த பணிகள், கடந்த 2021ம் ஆண்டுக்கு பிறகு மறுபடியும் ஆரம்பமாகின.. கிட்டத்தட்ட 17 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு, பல கட்ட சோதனைகளை முடித்து, கடந்த மார்ச் மாதம் இந்த வழித்தடம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. மார்ச் 14ந் தேதி வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான இந்த ரெயில் சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.. இதனால் புழுதிவாக்கம், கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆரவாரம் செய்து இதனை வரவேற்றனர். ஆனாலும் ஒரு குறை இருக்கவே செய்கிறது.. ஆதம்பாக்கம் ரெயில் நிலையம் மட்டும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.. வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை ரெயில்கள் இயக்கப்படும்போதிலும், ஆதம்பாக்கம் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்லவில்லை. எனவே அந்தப் பகுதி மக்கள் அருகிலுள்ள பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று ரயில் ஏறும் கட்டாயத்துக்கு ஆளாகினர். இதனால் ஆதம்பாக்கம் ரெயில் நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி, அந்தப் பகுதி மக்கள் ஏக்கத்துடன் கேட்டு காத்து கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான், இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் இதுகுறித்து ஒரு முக்கிய விளக்கத்தை சொல்லி உள்ளனர்.. அதிகாரிகள் சொல்லும்போது, "ஆதம்பாக்கம் ரெயில் நிலையம் வளைவான பகுதியில் அமைந்துள்ளதே இந்தத் தாமதத்திற்கு முக்கிய காரணமாகும். ரெயில் நிலையத்திற்கும், தண்டவாளத்திற்கும் இடையிலான வளைவு காரணமாக, ரெயில் பெட்டிகளுக்கும் நடைமேடைக்கும் இடையே பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் அளவுக்கு அதிக இடைவெளி இருப்பதாக ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.. அதனால்தான் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே அந்த நிலையத்தில் ரெயில்கள் நிறுத்தப்படவில்லை.. இந்த பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான பொறியியல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கான பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த ஜூலை மாதம் இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, ரெயில் நிலையம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் " என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த உத்தரவாதம் ரயில் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. காரணம், ஆதம்பாக்கம் ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது, அப்பகுதி மக்கள் பரங்கிமலைக்குச் சென்று ரெயில் ஏற வேண்டிய சிரமம் நீங்கி, நேரமும் பயணச் செலவும் மிச்சமாகும். புழுதிவாக்கம், கீழ்க்கட்டளை மற்றும் மடிப்பாக்கம் பகுதி மக்களும் எளிதாக தங்கள் பயணத்தைத் தொடங்க வழிவகை செய்யும். அனைத்துக்கும் மேலாக சென்னை மாநகரத்தின் புறநகர் ரயில் போக்குவரத்து நெட்வொர்க் முழுமையடைந்து, பயணிகளின் போக்குவரத்து நெரிசலும் கணிசமாகக் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை ரயில் நிலையங்கள்
வேளச்சேரி - பரங்கிமலை ரெயில் சேவை
42 வயசுல விபச்சாரம்.. வாடகைக்கு வீடு எடுத்து அட்டகாசம்.. சென்னை ஆதம்பாக்கம் வீட்டில் நுழைந்த போலீஸ்
ஆதம்பாக்கம் ரயில் நிலையம்
எப்போது பயன்பாட்டுக்கு வரும்
சென்னை பரங்கிமலை - ஆதம்பாக்கம் இடையே பறக்கும் ரயில் மேம்பால தூணில் மெட்ரோ ரூட்.. சவாலான பணி நிறைவு!
டிராபிக் குறையும்