சென்னை: திமுகவின் தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் திமுக தலைமை மௌனமாக இருப்பதற்கு சில காரணங்கள் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுகவின் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட கள ஆய்வு குழுவினரின் அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டும், அதன் மீதான எந்த நடவடிக்கையும் திமுக தலைவர் ஸ்டாலின் இப்போது வரையில் எடுக்காமல் இருக்கிறார். தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அதன் மூலம் கட்சியை வலிமைப்படுத்தவும் தானே கள ஆய்வு செய்ய கள ஆய்வு குழுவினரை நியமித்தார் தலைவர் ஸ்டாலின்.
அதற்கேற்பத் தானே தமிழகம் முழுவதும் களஆய்வும் செய்யப்பட்டது; அறிக்கையையும் வாங்கினார்கள். அப்படியிருக்க, ஏன் நடவடிக்கை இல்லை? எப்போதும் போல, அப்போதைய டென்சனை தவிர்ப்பதற்காக எடுக்கப்பட்ட யுக்தியா இது ? அதற்காகத்தான் கள ஆய்வு குழு அமைக்கப்பட்டதா? இது உண்மையானால், திமுகவை யாராலும் காப்பாற்ற முடியாது என்கிற கோபம் கள ஆய்வுக்குழுவினருக்கும், திமுகவின் உண்மையான உடன்பிறப்புகளிடம் எதிரொலித்தபடி இருக்கிறது. உடன்பிறப்புகளின் இந்த மனநிலையை திமுக தலைமைக்கும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அதனை யோசித்துத்தான், நடவடிக்கை யை கொஞ்சம் தள்ளிப்போட்டுள்ளார் தலைவர் (ஸ்டாலின்). அதாவது, அதிமுகவில் எடப்பாடியிடம் முரண்பட்டுள்ள அதிமுகவினர் எல்லோரும் தவெகவுக்கு செல்கிறார்கள். அவர்களை தவெகவில் சேர்க்க அக்கட்சியின் தலைமை (விஜய்) உத்தரவிட்டிருக்கிறது. அதேசமயம், திமுகவிலிருந்து முக்கியமான சிலர் தவெகவுக்கு செல்ல அக்கட்சியின் முக்கியஸ்தர்களிடம் பேசியிருக்கிறார்கள். அதனை அக்கட்சியின் தலைமைக்கு எடுத்துச் செல்லப் பட்டபோது, 'அவர்களை (திமுகவினர்) கொஞ்சம் நாள் வெயிட் பண்ண வையுங்கள். நான் சொல்லுகிறபோது சேர்த்துக்கொண்டால் போதும். இப்போ தைக்கு திமுகவினரை சேர்க்காதீர்கள்' என்று சொல்லியிருக்கிறது அக்கட்சி யின் தலைமை. திமுகவினரை இப்போதைக்கு சேர்க்காதீர்கள் என தவெக தலைமை ஏன் சொன்னது? என்பதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், இந்த தகவல், எங்கள் தலைமைக்கு (ஸ்டாலின்) தெரிய வந்தது. இப்படிப்பட்ட நிலையில், கள ஆய்வுக்குழுவினரின் பரிந்துரைகள், உதயநிதி மற்றும் சபரீசனின் ஆலோச னைகள் படி நடவடிக்கை எடுக்க தலைவர் ஸ்டாலின் முன் வந்தார். அப்போது தான், தவெக தலைமை எடுத்த முடிவு எங்கள் தலைவருக்கு தெரியவந்தது. அந்த வகையில், கள ஆய்வின் அறிக்கையில் சொன்னதன்படி நடவடிக்கை எடுத்தால் மா.செ.க்கள், ந.செ.க்கள், ஒ.செ.க்கள் என பலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும். அப்படி எடுத்தால் அவர்கள் உடனடியாக, தவெக வுக்கு போவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. அக்கட்சிக்கு தாவும் திமுகவினர், சும்மா இருக்க மாட்டார்கள். திமுகவுக்கு எதிராகவும் ஸ்டாலின் மற்றும் உதய நிதியை விமர்சித்தும் கடுமையாக பேசுவார்கள். கடுமையாக பேச தவெக தலைமையே அவர்களுக்கு யோசனை சொல்லித்தரும். ஏற்கனவே பல பிரச்சனைகள் கட்சிக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இவர்கள் தாக்கி பேசுவதற்கும் பதில் சொல்ல வேண்டியதிருக்கும். அதற்கெல்லாம் நேரம் இல்லை. அதனால் தான், இப்போதைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் ; சரியான நேரத்தில் கட்சியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கலாம் என யோசித்து நடவடிக்கையை ஒத்தி வைத்துள்ளார் தலைவர்'' என்கிற தகவல்கள் அறிவாலயத்துக்கு நெருக்கமான கள ஆய்வு குழுவினரிடமிருந்து கிடைக்கின்றன. - சிறப்பு நிருபர் எழில்