தவறு செய்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை.. புதிய அரசுக்கு காலஅவகாசம் தேவை.. அமைச்சர் செங்கோட்டையன்


  • கோவை: புதிய அரசு பொறுப்பேற்று 45 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளதால் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த கால அவகாசம் தேவை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும், தவறு செய்தவர்கள் எந்த உயர்மட்டத்தில் இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

    Advertisement

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது ஏற்புடையதல்ல என்றும், தமிழகத்திற்கு நேர்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் தொலைநோக்குச் சிந்தனையாக உள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    Advertisement

    மக்களின் தீர்ப்பால் நிராகரிக்கப்பட்டதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் இன்று எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. அவர்கள் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பதைத் தவிர்த்துவிட்டு, ஆக்கபூர்வமான கருத்துகளைக் கூறி மாநில வளர்ச்சிக்கு உதவினால் அது பெரும்பேறாக இருக்கும். முதலமைச்சர் பிறந்தநாளன்று பள்ளி மாணவர்கள் கட்சிக்கொடியை ஏந்தி வந்ததில் எவ்வித தவறும் இல்லை. இது ஒரு உணர்வுப்பூர்வமான எழுச்சி.

    தமிழகத்தில் ஒரு மாபெரும் மாற்றம் வேண்டும் என வீட்டிலுள்ள குழந்தைகளே பெற்றோரிடம் தங்களின் விருப்பமான விசில் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரினர். வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் கூட பல ஆயிரம் ரூபாய் சொந்த செலவு செய்து தமிழகம் வந்து வாக்களித்து இந்த மாற்றத்தை உருவாக்கியுள்ளனர். குழந்தைகளை கொடி ஏந்தி வரச் சொல்லி நாங்கள் நிர்ப்பந்திக்கவில்லை, அது அவர்களின் அன்பின் வெளிப்பாடு.

    Advertisement

    தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தைப் பொறுத்தவரை, எங்கு சென்றாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும், நிகழ்ச்சி முடிவில்தான் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் லட்சியப் பயணம். இதில் எந்தத் தவறும் இல்லை, இதற்கான தெளிவான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரைப் போலவே, மாநிலத்தில் ஆளுநரையும் நாம் மதிக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சியினர் ஆளுநர் பதவியையே கிண்டல் செய்யும் வகையில் பேசி வருகின்றனர்.

    பருவமழையைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை குறைவாகவே உள்ளது. வடமேற்கு பருவமழை வரும்போதுதான் நிலைமை மாறும். கடந்த 21 ஆண்டுகளில் 7 முறை மட்டுமே ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. மழையில் 200 மூட்டை நெல்கள் நனைந்து வீணானதாகக் கூறுவது தவறான தகவல். 20 மூட்டைகள் மட்டுமே நனைந்துள்ளன. நெல் மூட்டைகளை தார்ப்பாய்கள் கொண்டு பாதுகாப்பாக மூடி வைக்க உணவுத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

    Advertisement

    நாங்கள் பொறுப்பேற்று 45 நாட்கள் மட்டுமே ஆகிறது. ஒவ்வொரு துறை அமைச்சரும் அதற்கான பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். எனவே, புதிய அரசுக்குச் சற்றே கால அவகாசம் தேவை. மேகதாது அணை விவகாரத்திலும் பொறுப்புள்ள அமைச்சர் உரிய விளக்கத்தைத் தெளிவாக அளித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் ஒரு நகைச்சுவையாளர் போலப் பேசுகிறார். அவருடைய விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது.

    திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையேதான் ரகசிய சமரசம் உள்ளது. புதிய ஆட்சி அமைந்த பிறகு மரபுப்படியே பிரதமரையும், குடியரசுத் தலைவரையும், மத்திய அமைச்சர்களையும் சந்திப்பது இயல்பான ஒன்று. ஆட்சி அமைக்க யாரிடமும் நாங்கள் உதவி கேட்கவில்லை. கடந்த ஆட்சியாளர்கள் 100 நாட்களில் நடவடிக்கை எடுப்போம் எனக்கூறி 5 ஆண்டுகள் எதையும் செய்யவில்லை. ஆனால், எங்கள் முதலமைச்சர் தெளிவாக உள்ளார்.

    Advertisement

    நாங்கள் தவறு செய்ய மாட்டோம், அதேசமயம் தவறு செய்தவர்கள் எந்த உயர்மட்டத்தில் இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    English Summary

    Minister Sengottaiyan said the 45-day-old government needs time to deliver results and assured strict action against anyone found guilty, regardless of their position.