நீதான்யா டிரைவரு.. 40 பயணிகளுடன் பிரேக் ஃபெயிலியரான கோவை தனியார் பேருந்து.. நொடியில் நிகழ்ந்த மேஜிக்


  • கோவை: கோவையில் சுமார் 100க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் திடீரென பிரேக் ஃபெயிலியர் ஏற்பட்டது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சத்தி சாலையில் தாறுமாறாக ஓடியது. பயணிகளும், சாலையில் இருந்த மக்களும் அதை பார்த்து பதறியுள்ளனர். ஆனால், பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் நகர் பகுதிக்கு பணிக்கு வருகிறார்கள். மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைப்பதற்கு ஏராளமான தனியார் பேருந்துகள் உள்ளன. தொழில் போட்டி காரணமாக கட்டுக்கடங்காத வேகத்தில் பேருந்தை இயக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தனியார் பேருந்துகள் விதிமீறல்களில் ஈடுபடுவதாக புகார்கள் உள்ளன. இதனால் அவ்வபோது விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

    Advertisement

    பேருந்தில் பிரேக் ஃபெயிலியர்

    நீலம்பூர் அருகே கடந்த வாரம் அதிவேகமாக இயக்கப்பட்ட தனியார் பேருந்து விபத்தில் சிக்கியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தனியார் பேருந்துகள் விதிகளை பின்பற்றுகின்றனவா என்று ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். கோவையில் இருந்து அன்னூர் செல்லும் சத்தி சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

    சத்தி சாலை கோவில்பாளையம் வழியாக குன்னத்தூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து புறப்பட்டுள்ளது. அந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
    பேருந்து கோவில்பாளையம் சாலையைக் கடக்க முயன்றது. அந்த நேரத்தில் ஓட்டுநர் பிரேக் மிதிக்க முயன்ற போது, அது எதிர்பாராத வகையில் துண்டிக்கப்பட்டது. இதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. ஓட்டுநரும், பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

    Advertisement

    ஓட்டுநரின் சாமர்த்தியம்

    பேருந்துக்குள் இருந்த பயணிகள் மரண பயத்தில் கூச்சலிடத் தொடங்கினர். பேருந்து கட்டுப்பாட்டை இழந்தாலும் ஓட்டுநர் பதற்றமடையவில்லை. அவர் சற்று சுதாரித்து பேருந்தை, சாலையின் ஓரத்தில் இருந்த மண் மேடான பகுதிகளை நோக்கிப் பேருந்தைத் திருப்ப முயன்று வேகத்தைக் குறைக்கப் போராடினார். பேருந்து கட்டுப்பாடின்றி வருவதைக் கண்டுகொண்ட அங்கு இருந்த உள்ளூர் பொதுமக்களும் உதவி செய்வதற்காக தயாராக இருந்தனர்.

    சாலையின் இரண்டு புறமும் இருந்த இதர வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு பேருந்தின் ஓரளவுக்கு வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. அங்கிருந்து மக்கள் கற்களைச் சக்கரங்களின் அடியில் முட்டுக் கொடுத்துப் பேருந்தை நிறுத்த உதவினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, 40க்கும் மேற்பட்ட பயணிகள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர். ஆபத்தான சூழலிலும் அசாத்தியமான தற்காப்புத் திறனை வெளிப்படுத்தி, சாதுரியமாகப் பேருந்தை நிறுத்திக் காட்டிய அந்த ஓட்டுநரைக் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Private bus: Coimbatore Kovilpalayam private bus got sudden break failure. However Driver smartly saved 40 passengers.