டெல்லி: காங்கிரஸின் ராகுல் காந்தி இப்போது லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதற்கிடையே ராகுல் காந்தி மிகக் கடுமையாக விமர்சித்துள்ள கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தி இந்தியாவின் ஒற்றுமைக்கு மிகவும் ஆபத்தானவராக மாறிவிட்டார் என்றும் இப்போது இந்தியாவைப் பிரிக்க மக்களைத் தூண்டுகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
நாடு முழுக்க ராகுல் காந்தி பாத யாத்திரை சென்றிருந்தார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை தொடர்ச்சியாக 150 நாட்கள் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளைத் தாண்டி பலரும் கலந்து கொண்ட நிலையில், இந்த பாத யாத்திரை காஷ்மீரில் நிறைவடைந்தது.
இந்த பாத யாத்திரைக்குப் பொதுமக்களிடையே மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்ததாகக் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். இந்த பாத யாத்திரையை முடித்துக் கொண்ட ராகுல், இப்போது லண்டன் சென்றுள்ளார்.
அங்கு லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்து கொண்டு வருகிறார். அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி மற்றும் பாஜகவைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையே ராகுல் காந்தியின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேச்சை வீடியோவாக பகிர்ந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தி இந்தியாவின் ஒற்றுமைக்கு மிகவும் ஆபத்தானவராக மாறிவிட்டார் என்றும் இப்போது இந்தியாவைப் பிரிக்க மக்களைத் தூண்டுகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் இளவரசர் அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டார் என்று ரிஜிஜு சாடியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தியின் பேச்சு தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள அவர் தனது ட்விட்டரில், 'இந்த மனிதர் இந்தியாவின் ஒற்றுமைக்கு மிகவும் ஆபத்தானவராக மாறிவிட்டார். இப்போது இந்தியாவைப் பிரிக்க மக்களைத் தூண்டிவிடுகிறார். இந்திய மக்களால் விரும்பப்படும் தலைவரான பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே மந்திரம் 'ஒரே இந்தியா.. சிறந்த இந்தியா' என்பது தான்.
இந்திய மக்களுக்கு ராகுல் காந்தி ஒரு பப்பு என்று தெரியும்.. ஆனால் வெளிநாட்டவர்களுக்கு அவர் உண்மையில் பப்பு என்று தெரியாது. அவரது முட்டாள்தனமான பேச்சுக்கு எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை.. ஆனால் பிரச்சனை என்னவென்றால், இந்தியாவுக்கு எதிரான அவரது பேச்சுகள் இந்தியாவின் இமேஜை கெடுக்கத் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. எடுபடாத ஒரு விஷயத்தை மீண்டும் முன்னிறுத்த ஒரு வரம்பு இருக்க வேண்டும். லண்டனில் மீண்டும் ரிலான்ச் செய்து, இந்தியாவில் இதையே அவர்கள் மார்க்கெட்டிங் செய்யப் பயன்படுத்துகின்றனர்' என்று ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவின் ஜனநாயகத்தைப் பிரதமர் மோடி அழித்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார். அவர் மேலும் பேசுகையில், 'இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமாகும். இது ஒரு பரஸ்பர பேச்சுவார்த்தை போல.. நீங்கள் எதாவது ஒன்றைத் திணிக்க முயன்றால், அது எதிர்வினையாற்றும். இங்கே ஒரு சீக்கியர் அமர்ந்து கொண்டிருக்கிறார். அவர் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர். இந்தியாவில் முஸ்லிம்கள் உள்ளனர். கிறிஸ்தவர்கள் உள்ளனர், இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகள். அவர்கள் அனைவரையும் சேர்ந்த நாடு தான் இந்தியா.
ஆனால், நரேந்திர மோடி இது இந்தியா இல்லை என்கிறார்.. நரேந்திர மோடி இந்தியாவில் இரண்டாம் தரக் குடிமகன் என்கிறார். ஆனால், அவர் கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை' என்று சாடியுள்ளார்.. ராகுல் காந்தி பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் தான் லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கிராண்ட் கமிட்டி ரூமில் உரையாற்றினார். அப்போது அவர் இந்தியாவில் எம்பியாக இருப்பது கடினம் என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், 'பாரத் ஜோடோ யாத்திரை குறித்த கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி, 'நான் முதலில் அரசியலுக்கு வந்த போது.. இந்தியா மற்றும் அரசியல் குறித்து எனக்கு ஒரு குறிப்பிட்ட பார்வை இருந்தது. அந்த நாட்களில், எந்த இந்தியனும் தன்னால் சொல்ல விரும்புவதைச் சொல்ல முடியும் என்று நான் நம்பினேன். ஆனால், இப்போது அங்கு நிலைமை அப்படியில்லை. முற்றிலும் சுதந்திரமாகவும் இருந்த உரையாடல்கள் இப்போது அடக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் சுதந்திர அமைப்புகளில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அமைப்புகள் ஊடுருவி வருகின்றன' என்று கூறியிருந்தார்.