தயவு செய்து 9ம் வகுப்பில் 3வது மொழி வேண்டாம்.. மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த உச்சநீதிமன்றம்


  • டெல்லி: ''சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 9ம் வகுப்பில் 3வது மொழியை அறிமுகம் செய்வது அவர்களின் மனஅழுத்தத்தை அதிகரிக்கும். 10ம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுத உள்ளதால் இந்த முடிவு தவறானது. இதனால் 6ம் வகுப்பில் 3வது மொழியை அறிமுகம் செய்ய வேண்டும்'' என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நம் நாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 9ம் வகுப்பில் 3வது மொழி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் இப்படியான பரிந்துரையை வழங்கி உள்ளது.

    Advertisement

    நம் நாட்டில் புதிய கல்வி கொள்கையின்படி சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ''நடப்பு கல்வியாண்டு 2026-27ல் இருந்து சிபிஎஸ்இ பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் மூன்றாவது மொழி கட்டாயமாக்கப்பட்டது.

    Advertisement

    மாணவ-மாணவிகள் 2 இந்திய மொழியும், ஒரு வெளிநாட்டு மொழியையும் தேர்வு செய்து பயிலலாம். அதேவேளையில் ஏற்கனவே 6, 7, 8 படிக்கும் மாணவ-மாணவிகள் இரண்டு வெளிநாட்டு மொழிகளை படித்தால் அவர்கள் புதிதாக இந்திய மொழியை படிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி இதற்கு முன்பு சிபிஎஸ்இ-யில் 8 ம் வகுப்புக்கு பிறகு 3வது மொழி பாடம் கிடையாது. ஆனால் நடப்பு கல்வியாண்டு முதல் 9 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும், அடுத்த கல்வியாண்டு (2027-28) முதல் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் 3வது மொழி கட்டாயம் என்றும், 9, 10ம் வகுப்பு மாணவர்கள் தங்களின் 3வது மொழிக்கு பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டு நடைமுறையில் பாஸாக வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    Advertisement

    இந்நிலையில் தான் இன்று தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் நாகரத்னா மற்றும் ஆர் மகாதேவன் அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது 'மகாசபா' எனும் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் (எதிர்தரப்பு) பிரியதர்ஷினி, 'தேசியகல்வி கொள்கை எந்த மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்கவில்லை'' என்று கூறினார்.

    அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாகரத்னா,''நீங்கள் இந்தியை விரும்பவில்லையா.. அதற்கு பதில் சமஸ்கிருதம் இருந்தால் என்ன பிரச்சனை?'' என்று தமிழக அரசு வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிப்பிரியா, ''9ம் வகுப்பில் இருந்து மும்மொழி கட்டாயமாகிறது'' என்று கூறினார்.

    Advertisement

    அப்போது நீதிபதி நாகரத்னா கூறுகையில், ''இல்லை. அது ரொம்ப தவறு. திடீரென 3வது மொழி வருவதால் 9ம் வகுப்பு மாணவர்கள் மனஅழுத்தத்துதுக்கு உள்ளாகலாம். எதற்காக 9 ம் வகுப்பில் புதிய மொழியை புகுத்த வேண்டும். அதனை 6ம் வகுப்பிலேயே கொண்டு வரலாம்.
    நான் என்னுடைய பள்ளி பருவமான 1976ம் ஆண்டு அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.

    எங்கள் பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வு தேவைப்பட்டதால் நடுநிலை வகுப்பிலேயே மூன்றாவது மொழி அறிமுகம் செ்யப்பட்டது. இந்தியில் கன்னடத்தில் படித்தோருக்கு இந்தி 2வது மொழியாகவும், இந்தியில் படித்தவர்களுக்கு கன்னடம் 2வது மொழியாகவும் இருந்தது. சமஸ்கிருதமும் அங்கு இருந்ததால் அதனை 3வது மொழியாக தேர்வு செய்ய முடிந்தது. மொழிகளை எவ்வளவு சீக்கிரம் கற்க தொடங்குகிறோமோ அவ்வளது நல்லது.

    Advertisement

    தயவுசெய்து 9 ம் வகுப்பில் 3வது மொழியை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஸ்டேட் போர்ட் உள்ளிட்டவற்றில் பயிலும் மாணவர்களுக்கு 10ம் வகுப்பில் பொதுத்தேர்வு உள்ளது. இதனால் 8 ம் வகுப்பு முடிக்கும் போதே மனஅழுத்தம் வருகிறது. எனவே மாணவர்களுக்கு 9ம் வகுப்பில் 3வது மொழியை கொண்டு வராமல் 6ம் வகுப்பிலேயே கொண்டு வர வேண்டும்'' என்றார்.

    English Summary

    The Supreme Court has observed that introducing a third language in Class 9 for students in CBSE schools would increase their stress levels. Noting that students have to appear for public examinations in Class 10, the Court deemed this decision incorrect and suggested that the third language should instead be introduced in Class 6. This recommendation comes at a time when CBSE schools across the country have introduced a third language in Class 9 for the current academic year.