பழனி கோயில் நில மோசடி.. 1 நாள் ஸ்பெஷல் டிரான்ஸ்ஃபர் பின்னணியில் உள்ள பெரும் புள்ளிகள் யார்?


  • திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, பக்தர்களின் இலவச வாகன நிறுத்தமாகப் பயன்பட்டு வரும் ரூ. 100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை முறைகேடாகத் தனிநபர்களுக்குப் பத்திரப்பதிவு செய்து கொடுத்த விவகாரத்தில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் பல சந்தேகங்கள், சர்ச்சைகள் எழுந்துள்ளன.

    Advertisement

    கொடைக்கானல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராகப் பணிபுரிந்து வரும் ஜஸ்டின் மணிகண்டன், வெறும் ஒரே ஒரு நாள் மட்டும் பழனி அலுவலகத்திற்கு ஸ்பெஷல் லீவ் வேகன்சி அடிப்படையில் மாற்றலாகி வந்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

    Advertisement

    இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் பின்னணியில் இருக்கும் பல மர்ம முடிச்சுகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

    ஒரு நாள் மாற்றம்; 100 கோடி மோசடி!

    பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான இந்த நிலத்தை வில்லங்க நிலமாக மாற்ற கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகள் ஏற்கனவே தெளிவாக உள்ளதாகக் கோயில் நிர்வாகத் தரப்பில் கூறப்படுகிறது.

    நீதிமன்ற உத்தரவுகளை மீறி, இந்த நிலத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத ஒரு அறக்கட்டளையைச் சேர்ந்த நபர் மூலம், இரு தனிநபர்களுக்கு கடந்த ஜூலை 6-ம் தேதி கிரயப் பத்திரம் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த முறைகேட்டை அரங்கேற்றுவதற்காகவே கொடைக்கானலில் இருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முன்பே திட்டமிட்டபடி ஒரு நாள் மட்டும் பழனிக்கு வேலை மாறுதலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். வந்த வேகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை விதிகளுக்குப் புறம்பாகப் பதிவு செய்துவிட்டு, அவர் மீண்டும் தனது பழைய இடத்திற்கே சென்றுவிட்டார்.

    செய்தி வெளியில் கசிந்து, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் போராட்டம் வெடித்த பிறகே, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

    எழும் அடுக்கடுக்கான கேள்விகள்:

    இந்த விவகாரத்தில் முறைகேடு செய்த அதிகாரி மீது மட்டும் தற்போது பதிவுத்துறை டி.ஐ.ஜி நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் அரசுக்கும், துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கும் எழுப்பப்படும் கேள்விகள் மிக முக்கியமானவை:

    Advertisement

    டிரான்ஸ்ஃபர் செய்த உயர் அதிகாரி யார்?

    கொடைக்கானலில் இருந்து ஒரு சார்பதிவாளரை, ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் பழனிக்கு மாற்றம் செய்து அனுப்பிய உயர் அதிகாரி யார்? அந்த இடமாற்ற உத்தரவின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அந்த உயர் அதிகாரி மீதும் ஏன் இன்னும் ஆக்ஷன் எடுக்கப்படவில்லை?

    நீதிமன்ற உத்தரவுகள் இருக்கும் நிலையில், கோயில் நிலத்தை சட்டவிரோதமாக எழுதிக் கொடுத்த அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயுமா?

    முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாகத் தெரிந்த பிறகும், அந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில விற்பனை பத்திரம் இன்னும் ஏன் உடனடியாக ரத்து செய்யப்படவில்லை?

    Advertisement

    இவ்வளவு பெரிய 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து கைமாறும்போது, சம்பந்தப்பட்ட துறைக்கு இது தெரியாமல் நடந்திருக்க வாய்ப்புண்டா?

    அரசே ஒரு அரசு அதிகாரியை ஒரு குறிப்பிட்ட நாளுக்காகத் தேடித்தேடி மாற்றி அனுப்பும் அளவுக்கு, இந்த நிலத்தை வாங்கிய தனிநபர்களின் அரசியல் மற்றும் பண செல்வாக்கு என்ன?

    கோயில் கண்காணிப்பாளர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது பழனி அடிவாரம் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு அதிகாரியை மட்டும் சஸ்பெண்ட் செய்துவிட்டு இந்த வழக்கைக் கண்துடைப்பாக முடிக்காமல், இந்த 100 கோடி ரூபாய் சதியின் பின்னணியில் இருக்கும் ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும், மாஸ்டர்மைண்டுகளையும் கைது செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

    English Summary

    Palani Temple Land Scam: 1-Day Sub-Registrar Transfer exposes a deep 100 Crore Conspiracy