ஐடி ஊழியர்களை விட இவர்கள் காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்


  • டெல்லி: இந்தியாவில் இன்னும் சில ஆண்டுகளில் இன்ஜினியர்கள், ஐடி ஊழியர்கள் போன்ற ஒயிட் காலர் பட்டதாரிகளை விட, பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற ப்ளூ-காலர் தொழிலாளர்களுக்கு தான் மிகக் கடுமையான தட்டுப்பாடு ஏற்படுமாம். இதனால் இந்த வேலை செய்வோரின் சம்பளம் தொடங்கி டிமாண்ட் வரை எல்லாமே அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

    Advertisement

    கனடாவைச் சேர்ந்த 'பைன்ட்ரீ' (Pinetree) என்ற மேக்ரோ டிரெண்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரான ரித்தேஷ் ஜெயின், உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தையில் உருவாகி வரும் மாற்றங்கள் குறித்து தனது லிங்க்டின் பதிவில் மிகத் துல்லியமாக தகவல்களை பகிர்ந்துள்ளார்.

    Advertisement

    உலக நாடுகள்

    அதில் அவர், ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவின் வளர்ந்த நாடுகளில் (உதாரணமாக ஜெர்மனி, அமெரிக்கா) வயதானவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.. பிறப்பு விகிதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. உலகளவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 1970களுக்குப் பிறகு தற்போது கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.

    மேலும், உலக மக்கள் தொகையில் 60%க்கும் அதிகமானோர் தங்களின் மக்கள்தொகையை நிலையாக வைத்திருக்கத் தேவையான மாற்று விகிதத்திற்கும் குறைவான பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளிலேயே வாழ்கின்றனர். அதாவது ஒரு நாடு தங்கள் மக்கள் தொகையை அப்படியே வைத்திருக்க அந்நாட்டின் தம்பதிகளின் பிறப்பு விகிதம் 2.1ஆக இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான நாடுகளில் பிறப்பு விகிதம் இதை விட குறைவாகவே இருக்கிறதாம்.

    Advertisement

    ப்ளூ காலர் வேலைகள்

    2023-ஆம் ஆண்டின் டேட்டாவின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள முக்கால்வாசி (75%) நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான திறமையான தொழிலாளர்கள் கிடைக்காமல் திணறி வருகின்றன. ஜெர்மனியில் 2024-ல் 80%க்கும் அதிகமான முதலாளிகள் ஆள் சேர்ப்பதில் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற ப்ளூ-காலர் தொழிலாளர்களுக்கு தான் டிமாண்ட் அதிகமாக இருக்கிறதாம்.

    உலகில் ஒயிட் காலர் ஊழியர்கள் அதிகமாகவும், ப்ளூ-காலர் தொழிலாளர்கள் மிகக் குறைவாகவும் உள்ளனர் என்று குறிப்பிடும் ரித்தேஷ் ஜெயின், இந்த மக்கள்தொகை வீழ்ச்சியை ஈடு செய்யப் பணக்கார நாடுகள் இந்திய ப்ளூ-காலர் தொழிலாளர்களை தங்கள் நாட்டிற்குள் அழைத்து வர தொடங்கியுள்ளதாகக் கூறுகிறார்.

    Advertisement

    தேவை அதிகரிக்கும்

    அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் சில ஆண்டுகளில் பல லட்சம் பிளம்பர்கள் மற்றும் எலக்ட்ரீஷியன்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தொழில் துறை கணிப்புகள் எச்சரிக்கின்றன. இதனால், திறமையான இந்தியத் தொழிலாளர்களைக் கவர வளர்ந்த நாடுகள் 'ஃபாஸ்ட் டிராக் விசா' போன்ற தூண்டில்களை வீசத் தொடங்கியுள்ளன.

    ரித்தேஷ் ஜெயினின் மேலும் கூறுகையில், "இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவில் பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள், தச்சர்கள், டிரைவர்கள், செவிலியர்கள் மற்றும் முதியோர் பராமரிப்பாளர்கள் ஆகியோருக்குப் பயங்கர தட்டுப்பாடு ஏற்படும். ஏனென்றால், இங்கிருக்கும் திறமையான தொழிலாளர்கள் அனைவரும் அதிக சம்பளம் தேடி வளர்ந்த நாடுகளுக்கு புலம்பெயர்ந்து விடுவார்கள்" என்றார்.

    Advertisement

    இந்தியா

    ஆனால், சர்வதேச சந்தைக்கு எது தேவையோ அந்த மனிதவளத்தை நாம் உற்பத்தி செய்வதில்லை என்பதே பெரும் விபரீதம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் டிகிரி முடித்த இளைஞர்களிடையேயான வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 40%ஆக உச்சத்தில் உள்ளது. இது படிக்காத அல்லது குறைந்த கல்வித்தகுதி கொண்ட இளைஞர்களின் வேலையின்மை விகிதத்தை விடப் பல மடங்கு அதிகமாகும்.

    அதாவது கல்லூரியை விட்டு வெளியேறும் பட்டதாரிகளில் 14 பேரில் ஒருவருக்கு மட்டுமே தங்களின் முதல் வருடத்தில் நிரந்தரமான ஊதியத்துடன் கூடிய வேலை கிடைக்கிறது. இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் லாஜிஸ்டிக்ஸ், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் கோடிக்கணக்கான ப்ளூ-காலர் வேலைகள் உருவாகப் போகின்றன. ஆனால், அதற்கேற்ற முறையான தொழில்நுட்பத் திறன் நம் நாட்டு இளைஞர்களிடம் இல்லை. இந்த வேலைகளை செய்ய அடுத்த தலைமுறை இளைஞர்கள் செய்யத் தயங்குகின்றனர்.

    English Summary

    Pinetree founder Ritesh Jain highlights a massive global shortage of blue-collar workers(இந்தியாவில் ப்ளூ காலர் வேலைகளுக்கு அதிகரிக்கும் தேவை): Blue-Collar Workers in High Demand across the globe.