டெல்லி: தமிழ் மக்கள் பாதுகாப்புடனும், அரசியல் உரிமைகளுடனும் கவுரவமாக வாழ்வதற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம், டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய அரசின் அழைப்புக்கிணங்க இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவர் கரு ஜயசூரியா தலைமையிலான பிரதிநிதிகள் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமைஇந்தியாவுக்கு வருகை தந்தது.
இந்தக் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். டெல்லியில் இவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புகள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா இன்று நிருபர்களிடம் கூறியதாவது: 2010ம் ஆண்டு இலங்கை குழுவுடன், நான் இந்தியா வந்தபோது ரூ.50 ஆயிரம் கோடி வழங்குதல் உட்பட இந்திய அரசிடம் பல கோரிக்கைவிடுத்தோம். அதில் கடந்த கால இந்திய அரசால் எங்கள் கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் இப்போது இருக்கும் புதிய அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். இலங்கையில், 50 ஆயிரம் வீடுகளை இந்திய அரசு தந்து உதவியுள்ளது. 1 லட்சம் கோடி நிதி எங்களுக்கு தேவைப்படுகிறது. அதை தந்து உதவுங்கள் என கேட்டுள்ளோம். இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து தமிழகத்தில் அகதிகளாக மக்கள் பலர் உள்ளனர். அவர்கள், வெளியேறுகிற அனுமதியை பெறுவதில் பல சிரமங்களை மக்கள் எதிர்கொள்கிறார்கள். அதை நிறுத்தி இலகுபடுத்தும் கோரிக்கையை வைத்திருந்தோம். இலங்கையில் உள்ள அரசியல் சூழ்நிலையில் அது வருமா, வராதா என்பது கேள்விக்குறி. எந்த அரசு வந்தாலும் ஆறு அல்லது ஓராண்டுக்குள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால், ஆறிய கஞ்சி பழங்கச்சியாகிவிடும். புதிய அரசு வந்து 3 வருடங்கள் ஆகிவிட்டன. எனவே இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் இருந்து எல்லாவற்றையும் ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இம்முறை கருத்தில் எடுப்பதாக இந்திய அரசு கூறியுள்ளார். இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.