திரும்ப திரும்ப சிக்கும் இண்டஸ்இண்ட் வங்கி.. மீண்டும் மெகா மோசடி.. மோடி, ஆர்பிஐ வரை பறந்த கடிதம்!


  • இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான இண்டஸ்இண்ட் வங்கி மீண்டும் ஒரு இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது. ஏற்கனவே இண்டஸ்இண்ட் வங்கியில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான டெரிவேட்டிவ்ஸ் (Derivatives) வர்த்தகத்தில் கணக்கியல் குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்து பெரும் சர்ச்சை நீடித்து வந்த வேளையில், தற்பொழுது வங்கியின் மூத்த அதிகாரியும், அவரது குடும்பமும் சேர்ந்து செய்த முறைகேடுகள் குறித்து ஒரு அடையாளம் தெரியாத நபர் whistleblower புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    Advertisement

    இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தக் கோரி இந்தியப் பிரதமரின் அலுவலகம் (PMO) மற்றும் ரிசர்வ் வங்கி (RBI) உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒழுங்குமுறை அமைப்புகளுக்குப் புகார் கடிதங்கள் அனுப்பியுள்ளார் இந்த whistleblower. இந்த விஷயம் தற்போது இந்திய வங்கித்துறையையும், முதலீட்டாளர்களையும் தற்பொழுது பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    ரகசியத் தகவல்களும்.. சமீர் அகர்வாலும்..

    மே மாதத்தின் இறுதியில் அனுப்பப்பட்டுள்ள புகார் கடிதத்தில், இண்டஸ்இண்ட் வங்கியின் முன்னாள் கிழக்கு இந்திய மண்டலத் தலைவர் சமீர் அகர்வால் என்பவர் வங்கியின் ரகசியத் தகவல்களைப் பயன்படுத்தி இன்சைடர் டிரேடிங் (Insider trading) எனப்படும் சட்டவிரோதப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் இந்த புகார் கடித்ததில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

    இந்த ரகசியப் புகாரின்படி, இண்டஸ்இண்ட் வங்கியின் முன்னாள் மண்டலத் தலைவர் சமீர் அகர்வால், வங்கியின் முக்கிய கார்ப்பரேட் கடன் விபரங்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தெரியாத ரகசியமான விஷயங்களை (Confidential information) முன்கூட்டியே தெரிந்து வைத்துள்ளார்.

    Advertisement

    மேலும் வங்கியின் மிக முக்கியமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் பொதுவெளியில் வெளியாவதற்கு முன்பாகவே, இத்தகைய ரகசியத் தகவல்களைத் தனது குடும்பத்தினருக்கும், தனக்குத் தொடர்புடைய பிற நிறுவனங்களுக்கும் சட்டவிரோதமாகப் பகிர்ந்துள்ளார்.

    இதன் மூலம் அவருடைய குடும்பத்தினர் சுமார் 815 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை முன்கூட்டியே வர்த்தகம் செய்து, அதன் வழியாகத் தோராயமாக 46 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதற்கு மிக முக்கிய ஆதாரமாக, சமீர் அகர்வாலின் கடன் போர்ட்ஃபோலியோ பரிசீலனையின் கீழ் இருந்த 'கேசோராம் இண்டஸ்ட்ரீஸ்' (Kesoram Industries) என்ற நிறுவனத்தின் மெகா வர்த்தக ஒப்பந்தம் வெளியாவதற்கு முன்பே, அவருடைய மனைவி அந்த நிறுவனத்தின் 34 லட்சத்திற்கும் அதிகமான பங்குகளை ரகசியமாக வாங்கியுள்ளார்.

    Advertisement

    இந்த ஒற்றைப் பரிவர்த்தனையின் மூலம் மட்டுமே அவருக்கு 3.26 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால், அவரது குடும்பம் சுமார் 816 கோடி ரூபாய் வரை இத்தகைய சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டு, மொத்தம் 53 கோடி ரூபாய்க்கும் அதிகமாக லாபம் அள்ளியுள்ளதாக அந்தப் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    புகாரை முற்றிலும் மறுத்த இண்டஸ்இண்ட் வங்கி

    இந்த விவகாரம் குறித்து இண்டஸ்இண்ட் வங்கி தற்பொழுது அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. ரகசியப் புகார்தாரர் கூறியுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் வங்கியின் நிர்வாகம் முற்றிலும் நிராகரிப்பதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    மேலும், புகாரில் எழுப்பப்பட்டுள்ள அனைத்துக் கவலைகளும் வங்கியின் உள்நாட்டுக் கொள்கைகள் மற்றும் சட்ட விதிகளின்படி ஏற்கனவே முறையாக ஆய்வு செய்யப்பட்டு, அதற்குரிய தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.

    Advertisement

    பிரதமர் அலுவலகம் டூ ஆர்பிஐ

    பிரதமரின் அலுவலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு மட்டுமின்றி, நாட்டின் மிக முக்கியப் புலனாய்வு அமைப்புகளான தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO) மற்றும் தேசிய நிதி நிருபண அதிகாரம் (NFRA) உள்ளிட்ட பிற அரசு அமைப்புகளுக்கு இந்த புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும், வங்கியின் முக்கிய நிதியாதார ஆவணங்களைச் செயற்கையாக மாற்றியமைத்தும் முறைகேடு செய்தது, மைக்ரோஃபைனான்ஸ் எனப்படும் சிறுதொழில் கடன்களைத் தகுதி இன்றி தொடர்ச்சியாகப் புதுப்பித்து நல்ல கடன்கள் போலக் காட்டியது (Evergreening of loans), மற்றும் வங்கியின் உள் தணிக்கை (Audit reviews) சோதனைகளில் கண்டறியப்பட்ட மோசடிக் கண்டுபிடிப்புகளை மூடிமறைக்க வங்கியின் உயர் மட்ட நிர்வாகக் குழு மற்றும் வாரிய உறுப்பினர்கள் தீவிரமாக முயன்றது போன்ற பல்வேறு அதிர்ச்சித் தகவல்களும் அந்தப் புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English Summary

    A new whistleblower has raised serious allegations of insider trading, financial manipulation, and governance failures at IndusInd Bank, including former zonal head Samir Agarwal allegedly making crores through confidential information. The complaint, sent to PMO, RBI, SFIO, and NFRA, comes amid the bank's existing Rs 2,000 crore derivatives accounting discrepancy, deepening regulatory scrutiny.