மெக்சிகோ: மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் நகரின் அருகே இன்று ரிக்டர் அளவுகோலில் 7.4 என்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நிலநடுக்கத்தில் அடுக்குமாடி கட்டங்கள் குலுங்கிய வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் நடுங்க வைத்துள்ளது.
மெக்சிகோ நாட்டில் தெற்கு மாநிலமாக சியாபஸ் உள்ளது. இங்குள்ள புவேர்ட்டோ மடேரா என்ற பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு, அலுவலகங்கள் குலுங்கிய நிலையில் பொதுமக்கள் அலறியடித்து வெட்ட வெளியில் தஞ்சமடைந்தனர்.
இதுதொடர்பாக அந்த புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ''மெக்சிகோவின் புவேர்ட்டோ மடேரோ என்ற பகுதியின் அருகே பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அருகே உள்ள இடங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 என பதிவாகி உள்ளது. '' என கூறப்பட்டுள்ளது. மேலும், ''சுனாமி அலைகள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது'' என்று வார்னிங்கும் செய்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சியாபாஸ் நகரை சுற்றிய 300 கிலோமீட்டர் தொலைவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து GeoShakeCommunity Seismic Network, '' மெக்சிகோ அரசு வார்னிங் செய்துள்ளது. ''ஒவ்வொரு நிலப்பரப்பையும் பொறுத்து நிலநடுக்கத்தின் அளவு மாறுபடும். இன்னும் கூட அடுத்த சில நாட்கள் நிலநடுக்கம் ஏற்படலாம். ஏனென்றால் இப்பகுதியில் கடந்த 30 நாட்களில் 22 நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. இதில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கமே சக்தி வாய்ந்தது'' என்று கூறியுள்ளது. இந்நிலையில் தான் இன்றைய நநிலநடுக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் குலுங்கிய வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன. அதன்படி வீட்டின் அலமாரிகளில் இருந்த பொருட்கள் அடுத்தடுத்து கீழே விழுகின்றன. கடைகளின் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்ட பொருட்களும் கீழே சரிகின்றன. அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று காற்றில் துணி பறப்பதுபோல் அங்கும், இங்குமாக அசைகிறது. அதன் மேல்புறத்தில் இருந்து தூசிகள் பறந்து கீழே விழுகின்றன. அதேபோல் மேம்பாலங்களும் கடுமையாக அசைந்தன. இதனால் பல இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் ஒன்றாக சேரும் இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மெக்சிகோவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. அதன்படி எல் சால்வடார் மற்றும் குவாத்தமாலா உள்ளிட்ட நாடுகளிலும் பொதுமக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். இதனால் மெக்சிகோ, எல் சால்வடார், குவாத்தமாலா உள்ளிட்ட நாடுகளின் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். குறிப்பாக மெக்சிகோ மக்கள் அதிக பயத்தில் உள்ளனர். ஏனென்றால் இந்த 7.3 என்ற ரிக்டர் நிலஅதிர்வுக்கு முன்பாக அந்த நாட்டில் 5.2, 4.5, 6.1 என்று 3 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் நிலநடுக்கங்களால் அந்த மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் பற்றி உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.