Recommended Video
சான் பிரான்சிஸ்கோ: உபேர் நிறுவனம் தனது டிரைவர்களிடமிருந்து மோசடியாக ஆண்டுக்கு ரூ. 36 கோடி வரை பறித்து வருவதாக அமெரிக்காவில் ஒரு வழக்கு கிளம்பியுள்ளது.
சான்பிரான்சிஸ்கோவில் உபேர் நிறுவனத்தின் கீழ் இயங்கும் டிரைவர்களுக்கு உரிய சம்பளத்தைத் தராமல் ஏமாற்றி மோசடி செய்கிறதாம் உபேர். அந்த நகரில் மட்டும் ஆண்டுக்கு ரூ. 36 கோடி வரை அதாவது 500 மில்லியன் டாலர் அளவுக்கு மோசடி செய்கிறதாம்.
இதுதொடர்பாக தற்போது உபேர் நிறுவனத்தின் மீது திவா லிமோசின் என்ற நிறுவனம் வடக்கு கலிபோர்னியா மாவட்ட கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதில், உபேர் நிறுவனம் தனது டிரைவர்களை, தனியார் ஒப்பந்த டிரைவர்கள் என்று தவறாக கணக்குக் காட்டி அவர்களுக்கு முழுமையான சம்பளத்தைத் தராமல் மோசடி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு நிறுவனத்தின் முழு நேர ஊழியர் (டிரைவர்) என்றால், அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 9.07 டாலரை செலவுக் காசாக தர வேண்டும். ஆனால் இதைத் தருவதில்லையாம் உபேர். காரணம், இவர்களை தனது நிறுவன டிரைவர்களாக அது கணக்கில் கொண்டு வராததால் இந்த தொகையை அது தராமல் ஏமாற்றியுள்ளது. மேலும் இந்த டிரைவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், ஓவர்டைம் ஊதியம், சாப்பாடு, ஓய்வு, இதர இழப்பீடுகள் உள்ளிட்ட பலன்கள் என எதையுமே உபேர் தருவதில்லையாம். திவா லிமோசின் என்ற கார் சர்வீஸ் நிறுவனம்தான் உபேரின் இந்த மோசடியை கோர்ட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. தங்களுக்காக பணி புரிபவர்களை தங்களது ஊழியர்களாக கணக்கு காட்டாமல் ஒப்பந்த ஊழியர்களாக கணக்கு காட்டக் கூடாது என்று கடந்த ஏப்ரல் மாதம்தான் கலிபோர்னியா சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒன்றை பிறப்பித்திருந்தது. ஆனால் அதை மீறியுள்ளது உபேர். இதனால் உபேர் நிறுவனத்திற்கு கடும் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவிலேயே வருஷத்துக்கு 36 கோடின்னா.. பாவப்பட்ட இந்தியாவில் எம்புட்டு கோடியோ.. உபேர் டிரைவர்களே.. உஷாராகுங்க!