மதுரை: தமிழக அரசியலில் 'போஸ்டர் பாலிடிக்ஸ்' என்றாலே அது மதுரை தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் புதிய போஸ்டர் ஒன்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் இரு கைகளையும் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகியோர் பிடித்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்துடன் மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரும் அண்ணாமலையுடன் இருப்பது போன்ற இந்த போஸ்டர்கள் மதுரையின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. தற்போது இந்த போஸ்டர் இணையதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கிடையே டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்ண்ணாமலை சந்தித்துப் பேசியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலை புதிய கட்சியையோ அல்லது இயக்கத்தையோ தொடங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே, மதுரை மாநகர் முழுவதும் அண்ணாமலை ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களில் அஜித் மற்றும் ரஜினி ஆகியோர் அண்ணாமலை கையை பிடித்து நடப்பது போன்ற புகைப்படத்துடன் "உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு'" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன. Brothers of annamalai madurai, மனித கடவுள் அஜித் பக்தர்கள் என்ற பெயரில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. பொதுவாகவே மதுரையில் ஒட்டப்படும் போஸ்டர்கள் ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சிகளை சீண்டும் விதமாகவோ அல்லது ஏதேனும் ஒரு அரசியல் மாற்றத்தை முன்னறிவிக்கும் விதமாகவோ அமைவது வழக்கம். ஆனால், அரசியலில் இருந்து ஒதுங்கியே இருக்கும் அஜித் குமார் மற்றும் நேரடி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் பாஜக தலைவருடன் இணைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. நடிகர் அஜித் குமார் பல ஆண்டுகளுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு, எனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தனது செயல்கள் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வெளியிலும் சரி எவ்வித அரசியல் சாயமும் தன் மீது படாதவாறு அவர் மிகுந்த ஜாக்கிரதையாக இருந்து வருகிறார். சினிமாவில் அஜித்துக்கு போட்டியாளராக கருதப்பட்ட விஜய் தற்போது அரசியலில் இறங்கி முதல் தேர்தலிலேயே வென்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ள இத்தகைய சூழலில், அண்ணாமலையுடன் அஜித்தை இணைத்து போஸ்டர் ஒட்டியிருப்பது அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தின் பெயரை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'எங்கள் தலைவன் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்' என ரசிகர்கள் ஒருபுறம் கொதித்தெழ, மற்றொரு புறம் இது பாஜகவின் தேர்தல் வியூகமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. ஏற்கனவே அஜித்தின் ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக ஒருமுறை வதந்திகள் கிளம்பிய போது, அதனை அஜித் தரப்பு முற்றிலுமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் நேரடியாக கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என அறிவித்தாலும், அவரது ஆன்மீக அரசியல் கருத்துக்கள் பாஜகவின் சித்தாந்தத்தோடு ஒத்துப் போவதாக ஒரு கருத்து நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. ரஜினிகாந்த் அண்ணாமலையை அவ்வப்போது சந்திப்பது மற்றும் பாராட்டுவது போன்ற நிகழ்வுகள் பாஜகவினருக்கு உற்சாகத்தை தந்து வந்தது. இதன் வெளிப்பாடாகவே இந்த போஸ்டர் மதுரை பாஜகவினரால் ஒட்டப்பட்டிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தமிழகத்தில் வரும் தேர்தல்களை கருத்தில் கொண்டு ரஜினி மற்றும் அஜித் போன்ற பெரும் மக்கள் செல்வாக்கு கொண்ட நடிகர்களின் பிம்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பாஜகவினர் விரும்புவதையே இந்த போஸ்டர்கள் காட்டுகின்றன. அண்ணாமலையின் கரங்களை இருவரும் பிடித்துக் கொண்டிருப்பது போன்ற போஸ்டரை, தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான குறியீடாக அண்ணாமலை ஆதரவாளர்கள் முன்னிறுத்த முயல்கின்றனர். மதுரை எப்போதுமே தமிழக அரசியலின் திசையை தீர்மானிக்கும் முக்கிய களமாக பார்க்கப்படுகிறது. இங்கு ஒட்டப்படும் ஒவ்வொரு போஸ்டருக்கும் ஒரு அரசியல் பின்னணி இருக்கும். தற்போது அண்ணாமலை தலைமையில் புதிய இயக்கம் உருவாகவுள்ள நிலையில், அவருக்கு ரஜினி, அஜித்தின் ஆதரவு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.அண்ணாமலை உடன் ரஜினி, அஜித்
மதுரை போஸ்டர்
அஜித் அரசியல்?
ரஜினி அரசியல்
சூடுபிடிக்கும் அரசியல் களம்