மதுரை: தவெக உடன் பாமக நெருக்கம் அதிகரித்து வரும் சூழலில், விசிக - பாமக ஒரே கூட்டணியில் இடம்பெறுமா என்ற கேள்விக்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார். சாதிய மதவாத அரசியலை உயர்த்திப் பிடிக்கின்ற கட்சிகளுடன் தேர்தலுக்காக கூட நாங்கள் கூட்டணி உறவை வைத்துக்கொள்ள மாட்டோம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி விசிக சார்பில் நடைபெறவுள்ள தமிழ் தேசிய மாநாடு தொடர்பாக மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில்,20ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தி நிறைவேற்ற பாஜக முயற்சிக்கலாம் என தெரிகிறது.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தையும் இயற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிகிறது. இந்த சூழலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்னவாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் உள்ளது. இந்தியா கூட்டணி என்ன நிலைப்பாட்டை எடுக்கிறதோ அந்த நிலைப்பாட்டோடு விசிக இணைந்து சட்ட மசோதாவை தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துமேயானால் எதிர்த்து நிற்கும் அதனை முறியடிப்போம் என்றார். தொடர்ந்து பத்திரிகையாளர் விஜயன் மீதான விசாரணை குறித்த கேள்விக்கு, விஜயன் மீது சந்தேகப்பட்டு விசாரணை என்ற பெயரால் நள்ளிரவு வேளையில் இழுத்தடித்து அலைக்கழித்திருக்கிறார்கள். விசாரிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. காவல்துறைக்கும், அரசுக்கும் உள்ள அதிகாரம் அது. உளவியல் ரீதியாக துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதை போன்ற ஒரு கருத்து உருவாகி இருக்கிறது. அந்த நடைமுறை ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. இந்த போக்கையும் கண்டிக்கிறோம் என்றார். தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக தவெக - திமுக ஒன்றாக இருக்கலாம் என கூறிய நிலையில், பாஜகவிற்கு எதிராக விசிக - பாமக இணையுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பாமகவின் கடந்த கால நடவடிக்கைகள் பாஜகவை ஒட்டியே இருந்ததால் தான் நாங்கள் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க நேர்ந்தது. யூகமான கேள்விக்கு யூகமான பதில் சொல்ல முடியாது. எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சாதிய மதவாத அரசியலை உயர்த்திப் பிடிக்கின்ற கட்சிகளுடன் தேர்தலுக்காக கூட நாங்கள் கூட்டணி உறவை வைத்துக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து சபரிவர்மன் லாக் அப் மரணம் தொடர்பான கேள்விக்கு, சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் கொடிய துயர நிகழ்வு. அதனை எண்ணி வேதனைப்படுகிறோம். அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சபரிவர்மன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார். அதனை முதல்வர் விஜய் பரிசிலித்து குடும்பத்தினரின் உணர்வை மதித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.தவெக பெண்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம்.. பொன்ராஜ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்