'இந்தியா' கூட்டணிக்கு ஷாக்.. பாஜக பக்கம் சாயும் சரத்பவார் அணி? தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு?


  • மும்பை: எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் சரத்பவார் அணியினர் உள்ளனர். இந்நிலையில் தான் நேற்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடன் சரத்பவார் அணியினர் ரகசிய சந்திப்பு நடத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு சரத்பவார் அணி எம்பிக்கள் ஆதரவளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    'இந்தியா' கூட்டணியில் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக சரத்பவார் உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டார். தற்போது அந்த கட்சி இரண்டாக உடைந்துள்ளது.

    Advertisement

    மறைந்த மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கட்சியை இரண்டாக்கினார். அஜித் பவார் அணி தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று அறிவிக்கப்பட்டது.

    அஜித் பவார் விமான விபத்தில் பலியான நிலையில் அவரது மனைவி சுனேத்ரா பவார் மகாராஷ்டிரா துணை முதல்வராகவும், கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். சரத்பவார் தற்போது தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) என்ற பெயரில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். சரத்பவார் அணி 'இந்தியா' கூட்டணியில் உள்ளது.

    இந்நிலையில் தான் தற்போது சரத்பவார் தலைமையிலான அணி பாஜகவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது நேற்று நள்ளிரவில் சரத்பவார் தலைமையிலான அணியை சேர்ந்த மூத்த தலைவர்களும், துணை முதல்வரும், பாஜக கூட்டணியில் உள்ளவருமான அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் உள்ளிட்டவர்கள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை நேற்று ரகசியமாக சந்தித்து பேசி உள்ளனர்.

    Advertisement

    ஏற்கனவே பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் ஒன்றிணைந்த செயல்பட உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சந்திப்பு பல்வேறு யூகங்களை எழுப்பி உள்ளது. அதன்படி சரத்பவார் தலைமையிலான அணியில் உள்ள எம்பிக்கள் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    நாடாளுமன்ற லோக்சபாவில் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தவும், மகளிருக்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தவும் கொண்டுவரப்பட்ட 'அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா 2026 கடந்த ஏப்ரல் 17ம் தேதி லோக்சபாவில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதவை நிறைவேற்ற 3ல் 2 பங்கு எம்பிக்களின் ஆதரவு தேவை. ஆனால் எதிர்க்கட்சிகள் எதிர்த்ததால் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.

    Advertisement

    தற்போது இதனை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஜூலை 20ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முறை எப்படியாவது இந்த மசோதாவை நிறைவேற்றி விட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதன்படி பிற கட்சிகளின் எம்பிக்களின் ஆதரவை பெறுவதில் பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில் சரத்பவார் அணியும் ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுபற்றி சரத்பவார் மகளும், எம்பியுமான சுப்ரியா சுலேவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ''அனைத்து மாநிலங்களிலும் இடங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்கவும், அதைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளைத் தெளிவாகவும் அரசு முன்வைத்தால், நாங்கள் அதை ஆதரிப்போம்'' என்று கூறினார். இதன்மூலம் மசோதாவிற்கு ஆதரவு கிடையாது என்பதை கூற அவர் மறுத்துள்ளார். இதனால் சரத்பவார் அணி பாஜகவின் பக்கம் செல்கிறதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்த தோற்கடித்தன. தற்போதும் இந்த மசோதாவை எதிர்க்க 'இந்தியா' கூட்டணி கட்சியினர் முடிவெடுத்துள்ள நிலையில் சரத்பவார் தலைமையிலான அணி பாஜகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English Summary

    Sharad Pawar's faction is part of the opposition's ‘INDIA' alliance. Against this backdrop, members of the faction held a secret meeting yesterday with Maharashtra Chief Minister Devendra Fadnavis. Furthermore, reports indicate that MPs from the Sharad Pawar faction intend to support the delimitation bill that the central government plans to introduce during the upcoming parliamentary session.