திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில்! அலறியடித்துக்கொண்டு இறங்கிய பயணிகள்! பீகாரில் அதிர்ச்சி!

  • பாட்னா: பீகார் மாநிலம் சசாராம் என்ற இடத்தில் இருந்து தலைநகர் பாட்னா நோக்கிச் சென்று கொண்டிருந்த சசாராம் - பாட்னா பயணிகள் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

    Advertisement

    ரயில் கஞ்சாஸ் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, அதன் ஒரு பெட்டியில் திடீரென கரும்புகை கிளம்பி, தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.

    Advertisement

    ரயில் பெட்டியில் தீப்பிடித்ததை கவனித்த பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். ரயில் நின்றதும், உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்தபடி ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வழியாக வெளியே குதித்து ஓடினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.

    தீ விபத்துக்கான காரணம்

    முதற்கட்ட விசாரணையின்படி, அந்த ரயில் பெட்டியில் இருந்த மின்சார வயரிங்கில் ஏற்பட்ட 'ஷாட் சர்க்யூட்' காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் அனைவரும் சரியான நேரத்தில் ரயிலில் இருந்து வெளியேறியதால், இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான உயிரிழப்போ அல்லது கடுமையான காயங்களோ ஏற்படவில்லை.

    Advertisement

    மீட்பு பணி

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து, தீ மேலும் மற்ற பெட்டிகளுக்குப் பரவாமல் தடுத்து, கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து காரணமாக அந்தப் பாதையில் செல்லும் பிற ரயில்களின் போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது.

    தொடரும் தீ விபத்துக்கள்

    முன்னதாக நேற்று, மத்தியப் பிரதேசத்தில் திருவனந்தபுரம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி ரயிலின் ஏசி பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது. மத்தியப் பிரதேசத்தின் லூனி ரிச்சா-விக்ரம்கர் அலோட் ரயில் நிலையத்திற்கு இடையே இந்த ரயில் பயணித்தக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதிகாலை 5.15 மணிக்கு பி1 ஏசி பெட்டியிலும், அதை தொடர்ந்து SLR பெட்டி மற்றும் சரக்கு பெட்டியிலும் தீ பரவியது. ஆனால் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

    Advertisement

    நேற்று ஒரு தீ விபத்து, இன்று மற்றொரு தீ விபத்து ஏற்பட்டிருப்பது ரயில்வே துறையின் பாதுகாப்பு அம்சங்களை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.

    English Summary

    A fire suddenly broke out on the Sasaram–Patna passenger train while it was traveling from Sasaram, Bihar, towards the state capital, Patna. As the train was passing near the Ganjas railway station, thick smoke suddenly began billowing from one of its coaches, and it subsequently burst into flames.