Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் வேளாண்துறை அமைச்சர் கமலகண்ணனின் காருக்கு அரசு பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்ப மறுப்பு தெரிவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கருப்பு சட்டை அணிந்து பேருந்தில் பயணம் செய்து தன்னுடைய எதிர்ப்பை பதிவு தெரிவித்துள்ளார் அமைச்சர் கமலகண்ணன்.
புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் பங்குகளை நடத்தி வருகிறது. இந்த பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் மட்டுமின்றி, முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசு துறையை சேர்ந்த வாகனங்களும் பெட்ரோல் மற்றும் டீசலை கடனுக்கு நிரப்பிகொண்டு, பின்பு அதற்கான பணத்தை சம்பந்தப்பட்ட துறைகள் மாத இறுதியில் அமுதசுரபிக்கு மொத்தமாக தருவது வழக்கம். இதனிடையே கடந்த பல மாதங்களாக அரசு துறைகள் 2.30 கோடி ரூபாய் அளவிற்கு எரிபொருளுக்கான பணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன. இதனால் அமுதசுரபி நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதன்காரணமாக 2019 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகு அரசு வாகனங்களுக்கு கடனுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படாது என அனைத்து துறைகளுக்கும் அமுதசுரபி சார்பில் சுற்றரிக்கை அனுப்பபட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வேளாண்துறை அமைச்சர் கமலகண்ணன் காரை, அவரது ஓட்டுநர் டீசல் நிரப்புவதற்காக, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அமுதசுரபி பெட்ரோல் பங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அமைச்சரின் காருக்கு டீசல் நிரப்ப மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனால் பெட்ரோல் பங்க் ஊழியருக்கு, அமைச்சரின் கார் ஓட்டுநருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு டீசல் நிரப்பாமலேயே அமைச்சரின் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டது. இந்த விஷயம் காரைக்காலில் இருந்த அமைச்சர் கமலகண்ணனுக்கு தெரியவர, அவர் கடும் கோபத்துக்கு உள்ளானார். இந்நிலையில் இன்று புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, அமைச்சர் கமலகண்ணன் காரைக்காலில் இருந்து அரசு பேருந்து மூலம் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்துள்ளார். மேலும் டீசல் நிரப்ப மறுப்பு தெரிவித்ததற்கு தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து அவர் பேருந்தில் பயணம் மேற்கொண்டார். வேளாண்துறை அமைச்சரின் காருக்கு அரசு பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்ப மறுப்பு தெரிவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.