அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்?


  • புதுச்சேரி: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சில வாரங்கள் ஆன நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் இன்னும் நடைபெறாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக் கட்சியான பாஜகவினர் இதனால் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக, தங்களுக்கு உரிய அமைச்சர் பதவிகள் மற்றும் இலாக்கா ஒதுக்கீடுகளை வலியுறுத்தி அவர்கள் முதல்வர் ரங்கசாமியின் இல்லத்துக்கு தினசரி படையெடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    Advertisement

    முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றபோது, பாஜக சார்பில் ஏ. நமச்சிவாயம் மட்டுமே அமைச்சராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், இதுவரை அவருக்கு எந்த இலாக்காவும் ஒதுக்கப்படவில்லை. மேலும் மூன்று அமைச்சர்கள் பதவியேற்கவுள்ள நிலையில், அதன் பின்னரே மொத்த இலாக்கா ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத பாஜக எம்.எல்.ஏக்களும், நமச்சிவாயமும் முதல்வரை சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

    Advertisement

    ஆனால், முதல்வர் ரங்கசாமி, "அய்யா சாமி எனக்கு இன்னும் உத்தரவு தரவில்லை. உத்தரவு வந்ததும் உங்கள் கோரிக்கை நிறைவேறும்" எனக் கூறி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த பதிலால் வெகுண்டெழுந்த பாஜகவினர், டெல்லி உயர்மட்டத் தலைமையைத் தொடர்புகொண்டு முறையிட்டனர். இருப்பினும், டெல்லி தரப்பில் "எல்லாம் அவருக்குத் (ரங்கசாமிக்கு) தெரியும். பொறுமையாக இருங்கள்" என பதில் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனால் நொந்துபோன பாஜகவினர், இனி டெல்லியை நம்புவதை விட ரங்கசாமியையே நம்பலாம் என முடிவு செய்துள்ளனர். அதன்படி, அமைச்சர் பதவி மற்றும் பல்வேறு வாரியப் பதவிகளுக்காக முதல்வர் ரங்கசாமியின் இல்லத்துக்கு தினமும் சென்று கோரிக்கை வைத்து வருகின்றனர். எம்.எல்.ஏக்கள் அமைச்சர் பதவியையும், பாஜக நிர்வாகிகள் வாரியத் தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வலியுறுத்தி கெஞ்சி வருவதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.ஆர். காங்கிரஸ் - பாஜக) வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. என்.ஆர். காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனால், கூட்டணி ஆட்சியில் பாஜகவுக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாகி வருவதால் கூட்டணிக்குள் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    அரசியல் பார்வையாளர்கள், இந்த சூழ்நிலை கூட்டணி உறவுகளை பாதிக்கக்கூடும் என அஞ்சுகின்றனர். முதல்வர் ரங்கசாமியின் அனுபவம் மிக்க தலைமை இந்த பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், பாஜகவினரின் தொடர் அழுத்தம் ரங்கசாமிக்கு சவாலாக உருவெடுத்துள்ளது.

    Advertisement

    புதுச்சேரி மக்கள், நிர்வாகம் துரிதமாக இயங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அமைச்சரவை முழுமையாக அமைக்கப்பட்டு, இலாக்காக்கள் ஒதுக்கப்பட்ட பின்னரே அரசு இயந்திரம் முழு வீச்சில் செயல்படும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. தற்போதைய இந்த அரசியல் நகர்வுகள் புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Puducherry Cabinet Expansion Delay: BJP MLAs Stage Daily Protests at CM Rangasamy's Residence