Recommended Video
சென்னை: குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவை செங்குன்றத்திற்கு அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குட்கா ஊழல் தொடர்பாக சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை உள்பட பல்வேறு இடங்களில் 5 ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ், குட்கா ஆலை உரிமையாளர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. ரெய்டில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால்துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள், சென்னை ஹைகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.ஐ. தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்பட 5 பேரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அளித்தது. இதைத்தொடர்ந்து மாதவராவை குட்கா குடோன் உள்ள மாதவரத்துக்கு அழைத்து சென்று இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என அதிகாரிகள் விசாரித்த வருவதாக கூறப்படுகிறது. சிபிஐ நடத்தும் விசாரணையில் முக்கிய பிரமுகர்கள் பலரின் பெயர் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.