மேட்டூர் அணையில் தெரியும் நந்தி சிலை! 90 ஆண்டு கால அதிசயம்! 300 வருட வரலாறு! டெல்டா மக்களின் ஜீவநாடி


  • மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் 58 அடியாக சரியும் போது தெரியும் நந்தி சிலை குறித்த வரலாறை பார்க்கலாம். இந்த மேட்டூர் அணையில் எப்படி நந்தி சிலை வந்தது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பண்ணவாடி என்ற கிராமம் உள்ளது. இங்கு அப்பகுதி மக்கள் வழிபட்ட ஜலகண்டேஸ்வரர் கோயில் மற்றும் தேவாலயம் இருந்தது.

    Advertisement

    மேட்டூர் அணை 1934 ஆம் ஆண்டு கட்டிய நிலையில் இந்த பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு அணையில் நீர் தேக்கப்பட்டு வருகிறது. இதனால் பண்ணவாடி மட்டுமின்றி கோட்டையூர் செட்டிப்பட்டி கிராமங்கள் அணை நீர்த்தேக்க பகுதிகளாக மாறி, இவை தண்ணீரிலும் மூழ்கின.

    இதனால் அந்த மக்கள் வழிபட்டு வந்த ஜலகண்டேஸ்வரர் கோயில், நாயம்பாடி இரட்டை கோபுர தேவாலயம் உள்ளிட்டவைகளும் நீரில் மூழ்கின. மேட்டூர் அணை நீர்மட்டம் சரியும் போது தேவாலய கோபுரம், ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலையும் தெரியும்.

    அதாவது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 58 அடியாக இருக்கும் போது நந்தி சிலை தெரியும். அது போல் தேவாலயத்தின் கோபுரமும் தெரியும்.

    Advertisement

    இந்த நந்தி சிலை கிட்டதட்ட 90 ஆண்டுகளுக்கு மேலாக நீரில் மூழ்கியும் கம்பீரமாக நிற்பது நம் கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அது போல் ஜலகண்டேஸ்வரர் கோயிலும் சிதிலமடையாமல் அப்படியே இருக்கிறது.

    இந்த பண்ணவாடி பகுதியில் கட்டப்பட்ட ஜலகண்டேஸ்வரர் கோயில் 300 ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இந்த நந்தி சிலை சுமார் 20 அடி உயரம் கொண்டதாகும். பொதுவாக சிவபெருமானை பார்த்தபடி நந்தி சிலை அமைந்திருக்கும். ஆனால் இந்த கோயிலில் கருவறைக்கு பின்புறம் முதுகை காட்டியபடி நந்தி சிலை அமைந்துள்ளது.

    இந்த மேட்டூர் அணை அன்றைய சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஸ்டேன்லியால் கட்டப்பட்டது. இதனால் இது ஸ்டேன்லி நீர்த் தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

    Advertisement

    இந்த அணை 1925 ஆம் ஆண்டு தொடங்கி 1934 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இது கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் உலகிலேயே மிகப் பெரிய அணையாகவும் ஆசியாவின் மிக உயரமான அணையாகவும் அறியப்பட்டது.

    இந்த அணையின் மொத்த உயரம் 120 அடி. அணையின் மொத்த கொள்ளளவு 93.4 டிஎம்சி. இவ்வாறு நந்தி சிலை தெரியும் போது அந்த காலகட்டத்தில் பரிசல் மூலம் கோயிலுக்கு மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. தற்போதும் நந்தி சிலை தெரிந்தால் வெளியே இருந்தபடியே மக்கள் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மேட்டூர் அணைக்கு வரும் காவிரி, டெல்டா மக்களின் குடிநீர் தேவையையும் விவசாய பாசனத்திற்காகவும் பயன்படுகிறது. ஆனால் காவிரியில் எவ்வளவு தண்ணீர் இருந்தாலும் இல்லை இல்லை என பஞ்சப்பாட்டு பாடும் கர்நாடகா, காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு தண்ணீரை திறக்க மறுக்கிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    English Summary

    Nandhi Statue which is drown in Mettur Dam will be visible only when the water level drops to 58 feet. Do you know the specifications?