திருப்பதி லட்டில் கலப்படம்: திண்டுக்கல் நிறுவனத்தில் 11 மணி நேரம் ED ரெய்டு! முக்கிய ஆவணங்கள் சிக்கின


  • திண்டுக்கல்: திருப்பதி லட்டு கலப்பட வழக்கு தொடர்பாக திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளரின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 11 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

    Advertisement

    ஆந்திராவின் திருப்பதியில் ஏழுமலையான் கோயில் உள்ளது. உலகப்பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக லட்டு பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம். திருப்பதி கோயிலில் வழங்கப்படும் இந்த லட்டு பிரசாதம் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

    Advertisement

    திருப்பதி லட்டு

    திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பை முந்தைய ஜெகன் மோகன் அரசு கலந்ததாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு ஜெகன் மோகன் ரெட்டி கட்சி மறுப்பு தெரிவித்து வந்தது. இத்தகைய சூழலில்தான், திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

    நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம்

    ஆய்வில் இந்த தகவல் வெளியாகி ஏழுமலையான் பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இதைத்தொடர்ந்து லட்டுவில் சேர்க்கப்படும் நெய்யை சப்ளை செய்த நிறுவனங்கள் அனுப்பிய நெய் டின்களில் இருந்து மாதிரிகள் குஜராத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் பிள்ளையார்நத்தம் பிரிவில் உள்ள ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனத்தின் நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருந்ததாகவும், அதில் சோயாபீனில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்ததாக கூறப்பட்டது.

    Advertisement

    இதையடுத்து அந்த நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் திருப்பதி கோயில் தேவஸ்தானம் சேர்த்துவிட்டு, வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து நெய் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனத்திற்கு கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு ஆய்வுகளை ஆந்திரா அரசும் தமிழக அரசும் செய்திருந்தன.

    முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

    இந்த சூழலில் இன்று காலை இந்த நிறுவனம் அமைந்துள்ள திண்டுக்கல் - மதுரை ரோடு மற்றும் அதன் உரிமையாளர் ராஜசேகர் வீடு அமைந்துள்ள பிள்ளையார்நத்தம் ஆகிய இரண்டு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 12-க்கும் மேற்பட்டோர் நான்கு கார்களில் வந்து சோதனை மேற்கொண்டனர். சுமார் 11 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    திண்டுக்கல் டெய்ரி நிறுவனம் மட்டுமின்றி நாடு முழுவதும் 15 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடு மூலம் ஈட்டிய ரூ.45 கோடியை பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Tirupati Laddu adulteration case, the Enforcement Directorate carried out an 11-hour search at AR Dairy Foods in Dindigul. Officials seized important documents, recovered Rs 60 lakh, and detected investments worth Rs 45 crore allegedly linked to illegal earnings.