வாடகை வீட்டில் இருந்த போது.. வெளியான ஆடியோ! இப்படியும் வதந்தி! திருமாவளவன் வேதனை


  • நெல்லை: உடல்களுடன் போராடியவர்களின் நடைமுறை சாத்தியங்களை சொல்லிய ஆடியோவை சிலர் வெளியிட்டு நான் தவெக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக வதந்தி பரப்புகிறார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்தார்.

    Advertisement

    நெல்லையில் விசிக சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது: இந்த இயக்கத்தின் கொடியை தன்னந்தனியாக விவேகானந்தா காலனியில் ஒரு வாடகை வீட்டில் இருந்து கொண்டு வடிவமைத்தேன்.

    Advertisement

    ஒரு வெள்ளை பேப்பரில் ஸ்கெட்ச் பேனாவில் வரைந்து வரைந்து பார்த்து நீலம் சிவப்பு நிறத்தில் நடுவில் நட்சத்திரம், உள்ளே பாயும் சிறுத்தை இருப்பது போன்ற ஒரு கொடியை உருவாக்கினேன்.

    கொடி சொல்லும் கொள்ளை விளக்கம் என்ற சுற்றறிக்கையை தயார் செய்தேன். அந்த கொடியில் இருக்கும் நீலம் உழைக்கும் மக்களின் விடுதலையை குறிக்கும் என குறிப்பிட்டிருந்தேன்.

    அதாவது தமிழர் விடுதலை, தலித் விடுதலை, குறிப்பிட்ட ஜாதி மக்களின் விடுதலையை குறிக்கும் என சொல்லவில்லை. இனம், மதம், ஜாதி அடையாளம் இல்லாத ஒரு கொடியை உருவாக்கினேன்.

    Advertisement

    உழைக்கும் மக்கள் என்றால் இந்தியா, உலகம் முழுவதும் பொருந்தக் கூடிய சொல். உழைக்கும் மக்கள் யாராக இருந்தாலும் அவர்களின் விடுதலையை குறிக்கும் என 1991 ஆம் ஆண்டு குறிப்பிட்டேன். சிகப்பு புரட்சிகர பாதையை குறிக்கும். அடித்தட்டு மக்களை அரசியல்படுத்தி அவர்களை போராட்ட வைத்து அதன் மூலம் தீர்வுகளை காணக் கூடிய போராட்ட பாதை!

    அம்பேத்கரின் நீலக் கொடியின் சரிபாதி சிகப்பை சேர்ந்த முதல் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம். நடுவே இருக்கும் நட்சத்திரம் 5 முனைகளை கொண்டிருக்கும். அது விடிவெள்ளி, அதாவது விடிய போகிறது என அடையாளப்படுத்துவதுதான் அந்த நட்சத்திரம்! அதில் உள்ள 5 முனைகள் 5 விஷயங்களை குறிக்கின்றன. ஒன்று சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம், பெண் விடுதலை, பாட்டாளி வர்க்க விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு! இந்த 5 முனைகளில் மொத்த அரசியலே அடங்கிவிட்டது.

    Advertisement

    உள்ளே இருந்த சிறுத்தைகள் பிறகு எடுத்துவிட்டேன். கொடியில் சிறுத்தை வேண்டுமென்றால் பிரிண்ட் போட்டால்தான் வரும். நாமே சிறுத்தை, உள்ளே ஏன் சிறுத்தை என அதை எடுத்துவிட்டேன்.

    ஒரு குறிப்பிட்ட ஊரில் இருவர் மரணமடைந்துவிட்டனர். அவர்களது உடல்களை வைத்துக் கொண்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நான் அவர்களுடன் போனில் பேசியதை சிலர் அரசியல் செய்தனர்.

    போஸ்ட் மார்ட்ம் செய்தால்தான் கொலையா என்பது தெரியவரும். எனவே போஸ்ட்மார்டம் செய்ய ஒப்புக் கொள்ளுங்கள் என்றேன். நான் அவர்களுடன் போனில் பேசியதை ஸ்பீக்கரில் போட்டு லைவ்வாக ஒளிபரப்பிவிட்டார்கள்.

    அந்த ஆடியோவை வைத்துக் கொண்டு, தவெக அமைச்சரவையில் விசிக இருப்பதால்தான் உடலை வாங்கச் சொன்னசாக சிலர் வதந்தி பரப்பினர். வெளிப்புறத்தில் காயம் இல்லாத போது போலீஸாரால் எப்படி கொலை வழக்கு பதிவு செய்ய முடியும். எனவே தற்போது சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துவிட்டு பிறகு உடற்கூராய்வு முடிவுகளை பொருத்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும் என நடைமுறை சாத்தியங்களை எடுத்துச் சொன்னதற்கு என்னை அப்படி விமர்சித்தார்கள். எந்த ஆட்சியாக இருந்தாலும் நான் இதைத்தான் செய்திருப்பேன்.

    Advertisement

    அம்பேத்கரின் கனவு என்ன தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டால் கூட சமத்துவ இந்தியாவை கட்டமைப்பதுதான் என சொல்ல வேண்டும். கனவு என்றால் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்றில்லை. லட்சியம் என்ன என்பதை தீர்மானித்து அதை நடைமுறைப்படுத்தவும் அதில் வெற்றி பெற்று நிறைவேற்றவும் முறையான செயல் திட்டங்களைத் தீட்ட வேண்டும் என்பதுதான் உண்மையான அர்த்தம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

    English Summary

    VCK President Thirumavalavan emotionally says that his audio was misinterpreted by someone and spread in social media.