திருவள்ளூர்: நாகர்கோவில் சபரிவர்மன் லாக் அப் மரணம் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார். இந்த லாக் அப் மரண விவகாரத்தில் சம்மப்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய சிடிஆர் நிர்மல்குமார், சிறைத்துறை அதிகாரிகள் பலரும் அழுத்தத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன், சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே உயிரிழந்தார். விசாரணை கைதி திடீரென உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கைகள், கால்கள், நெஞ்சு, வலது கையில் முறிவு என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த காயங்கள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறை வார்டன் உட்பட சிறை காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவக்குமார், திருமலைநம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூட சொல்லவில்லை. அமைச்சர்களோ, தவெக நிர்வாகிகளோ கூட இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்கவில்லை. இது தவெக மீது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமார் லாக் அப் மரணத்திற்காக போராடிய விஜய், சபரிவர்மன் குடும்பத்திற்கு இதுவரை தொலைபேசியில் கூட ஆறுதல் சொல்லவில்லை. இந்த நிலையில் சபரிவர்மன் லாக் அப் மரணம் தொடர்பாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிடிஆர் நிர்மல்குமார், அந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றச்செயல்களுக்கு என்றும் யாரும் ஆதரவு அளிக்கப் போவதில்லை. அத்துமீறல் நடக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறைத்துறையிலும் ஏராளமான அதிகாரிகள் அழுத்தத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு பல ஆண்டுகளாக பதவி உயர்வோ, தேவையான ஊதியம் இல்லை. அதனை சரி செய்வதற்கான பணிகள் நடக்கும். அதேபோல் லாக் அப் மரண விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.