திருவாரூர்: சட்டசபைத் தேர்தலில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்று விட்டு அமைச்சர் பதவி வாங்கி விட்டார்களே என புலம்பி தள்ளுகிறார்கள் என திமுகவை விசிக தலைவர் திருமாவளவன் மறைமுகமாக சாடினார்.
கட்சி நிர்வாகிகள் சரியாக செயல்பட்டால் இந்த திருமாவளவன் முதலமைச்சராகலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் கூட விசிகவினர் கூட்டணிக்காக உழைக்கவில்லை என திருமாவளவன் ஏற்கெனவே கூறியிருந்தார்.
திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி இல்ல திருமண விழாவில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு திருமண விழாவில் அவர் பேசியதாவது: 234 தொகுதி மாவட்டச் செயலாளர்கள 40 நாடாளுமன்ற தொகுதிக்கான மண்டலச் செயலாளர்கள் ஒவ்வொரு மண்டலத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள துணைப் பொதுச் செயலாளர்கள் ஒவ்வொரு அணியை சேர்ந்த மாநில பொறுப்பாளர்கள் சரியாக செயல்பட்டால் முதலமைச்சர் கனவு நனவாகும். ஏனென்றால் அவ்வளவு எளிதாக இந்த சமூகம் நம்மை ஏற்றுக் கொள்ளாது. இரண்டு சீட்டுகள் வைத்துக் கொண்டு இவ்வளவு ஆட்டமா என கேட்கிறார்கள். அந்த இரண்டு சீட்டு இல்லாமல் தான் ஆட்சி அமைக்க முடியவில்லை என தெரியவில்லை. ஆட்சி அமைப்பதற்கு இந்த இரண்டு சீட்டு அவசியம் தேவை. ஆகவே இது முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் அவர்களுக்கு நம் மீது இருக்கிற காழ்ப்புணர்வு எப்படியாவது விமர்சிக்க வேண்டும், இரண்டு இடத்தில் வெற்றி பெற்று விட்டு அமைச்சர் பதவி வாங்கி விட்டார்களே என புலம்பி தள்ளுகிறார்கள். அதனை நாம் பெரிதாக சாதனையாக நினைக்கவில்லை. அதனால் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற்றுவிட போவதில்லை, இதனால் சாதிய வன்கொடுமைகள் நின்று போகவிடுவதில்லை, ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் கூட இது போன்ற வன்கொடுமைகள் தொடரும், ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமே இதற்கு பொறுப்பல்ல. திமுக ஆட்சியில் இருந்தாலும் சரி , அதிமுக ஆட்சியில் இருந்தாலும் சரி, தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் இருக்கிற சூழ்நிலையிலும் சரி, நாமே ஆட்சிக்கு வந்தாலும் சரி, இந்த சமூகத் தீமைகள் நின்று விடாது, தடுத்து நிறுத்தி விட முடியாது. அந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு உரிய தீர்வை சொல்ல வேண்டும். அதை யாரும் சொல்ல மாட்டார்கள். தீர்வு சொல்லக்கூடிய அளவிற்கு யாருக்கும் ஆளுமை இல்லை. குறை சொல்வதற்கு யாராலும் முடியும். தீர்வு சொல்வதற்கு யாராலும் முடியாது. அம்பேத்கர் வகுத்தலித்த அரசியலமைப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துகிற போது தான் காலப்போக்கில் அதற்கு தீர்வு காண முடியும் இந்த புரிதல் நமக்கு தேவை ஒரே நாளில் எல்லாவற்றையும் சீர் செய்து விட முடியாது. இந்த அணியில் சேர்ந்தால் இன்னொரு அணியில் உறவு கொள்ளவே கூடாது. நட்பு இருக்கக் கூடாது என சொன்னால் நம்பிக்கைக்கு எதிரானது, நம்பிக்கை துரோகமானது. இப்படி எல்லாம் பேசுகிற நிலையை நாம் பார்க்கிறோம் என திருமாவளவன் பேசினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். அண்மைக்காலமாக தவெகவுக்கு ஆதரவு அளித்த திமுக கூட்டணி கட்சியினரை திமுக நிர்வாகிகள் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதற்கு திருமாவளவன் உள்ளிட்டோரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.பாஜகவோடு நாளை திமுக கைகோர்க்கும் நிலை வரலாம்! புது கதையை கிளப்பிய திருமாவளவன்!
கடலூர் அரசு பள்ளி கிளாஸ்ரூமில், எஸ்ஐ திருமாவளவன் முன்பு புள்ளிங்கோ ஸ்டைலை ஒட்ட நறுக்கி! என்ன நடந்தது