தூத்துக்குடி: மாலை 6 மணிக்கு வீட்டுக்கு சென்றால், காலை 10 மணிக்கு எழுந்திருக்கும் முதல்வர் விஜய்க்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது என திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் இங்கு ஒரு வார்டில் கூட வெல்ல முடியாது என்று சவால்விட்ட அனிதா ராதாகிருஷ்ணன், என்னை 5 ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் திமுகவை அசைக்க முடியாது என்று சாடியுள்ளார்.
கடந்த வாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முதல்வர் விஜய்யை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இதன்பின் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்போது தவெகவில் இணைய போலீசார் வற்புறுத்தியதாக அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் முதல்வர் விஜய்யை மீண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் சீண்டி இருக்கிறார்.
திமுக பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், நம்மை பல வியூகங்கள் வகுத்து வீழ்த்தி இருக்கிறார்கள். நமது தலைவரே தோற்கடிக்கப்பட்டுள்ளார். தலைவரை வீழ்த்தியவர், நான் 5 நிமிடம் தான் பேசினேன். கொத்து பரோட்டா ஆக்கிவிட்டார்கள் என்கிறார். மாலை 6 மணிக்கு சென்றால், காலை 10 மணிக்கு எழும்புவார்.. அவருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. சினிமாவில் நடிப்பது போல் நடிக்கலாம்னு நினைக்கிறார்.. உள்ளாட்சித் தேர்தல் வரும் போது, எல்லா இடத்திலும் திமுக தான் வென்றது என்ற வரலாற்றை உருவாக்கும் இடத்தில் நாம் இருக்க வேண்டும். காங்கிரஸ் இங்கு வென்றுவிடட்டும் பார்க்கலாம்.. எங்காவது தவெக வென்றுவிடுமா பார்க்கலாம். யாராலும் உள்ளாட்சித் தேர்தலில் நம்மை வெல்ல முடியாது. இடைத்தேர்தலில் முடிந்தால் வெல்லட்டும்.. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் தான் வெல்வார். மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், சினிமாவை வைத்து ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் ஒருவர் இருக்கிறார். அதேபோல் முதல் போட்ட முதலமைச்சர் ஒருவர் இருக்கிறார். திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. நான் மேடையில் பேசியதற்காக என் மீது புகார் அளித்தனர். நான் ஜாமீன் போட்டேன்.. ஜாமீன் கிடைக்கவில்லை.. உடனடியாக முதல் போட்ட முதல்வர் எஸ்பி-க்கு அழைத்து உடனே அனிதாவை கைது செய் என்று உத்தரவிடுகிறார். ஒரு மாதம் உள்ளே வைக்கலாம் என்று நினைத்தார்கள். ஒரு மாதம் அல்ல.. 5 ஆண்டுகள் சிறையில் வைத்தாலும், திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.50 கோடி எவ்வளவு இருக்கும் ? ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ புகாருக்கு அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்