முதல்வர் விஜய் மீது ஒருமையில் விமர்சனம்.. அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு


  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் பற்றி ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மரியாதை குறைவாக அவதூறு பரப்பும் வகையில் பேசியது, மோதலை தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த விழாவில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் குறித்து விமர்சித்து பேசினார்.

    Advertisement

    3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

    குறிப்பாக முதல்வரை ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார். சட்டசபையில் விஜய் நடந்துகொண்டதை வைத்தும் கடுமையாக விமர்சித்து பேசினார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக ஆத்தூர் பகுதி நிர்வாகிகள் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், மரியாதைக் குறைவாகவும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குறிப்பாக விஜய் குறித்து மரியாதை குறைவாக அவதூறு பரப்பும் வகையில் பேசியது, மோதலை தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    அனிதா ராதாகிருஷ்ணன் பதிலடி

    எத்தனை வழக்குகள் எத்தனை முறை போட்டாலும் மக்களுக்கான உண்மையை உரக்கப் பேசுவோம் என்று அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எத்தனை வழக்குகள் எத்தனை முறை போட்டாலும் மக்களுக்கான உண்மையை உரக்கப் பேசுவோம். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழர்களின் சுயமரியாதைக்காகவும் அச்சமின்றி தொடர்ந்து இயங்கிவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மை தொண்டனை வழக்குகள் போட்டு அச்சுறுத்த இயலாது. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் வழியில் கழகத் தலைவர் தளபதியார் மு.க.ஸ்டாலின் வழியில், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வழியில் மக்களின் உரிமைக்கும் வாழ்வியலுக்குமான எங்கள் போராட்டம் தொடரும்.

    Advertisement

    உண்மையை உரக்கப் பேசுவோம்

    எழுத்துரிமை, பேச்சுரிமை, ஜனநாயக உரிமை என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படையை வழக்குகள் போட்டு தடுக்க இயலாது. திருச்செந்தூர் தொகுதி மக்களின் நலனுக்காக எங்கள் போராட்டம் என்றும் தொடர்வோம். உண்மையை உரக்கப் பேசுவோம். மக்கள் சக்தி வெல்வது நிச்சயம். என்று கூறியுள்ளார்.

    English Summary

    Anitha Radhakrishnan: Police register a case against former DMK minister Anitha Radhakrishnan under three sections for allegedly making defamatory and disrespectful remarks about Chief Minister Vijay. The charges include spreading defamatory content, provoking conflict, and disturbing public peace.