விழுப்புரம்: சிவி சண்முகத்திற்கு ஆதரவாக செயல்பட்ட விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. வல்லம்,மயிலம், திண்டிவனம் செயலாளர்களை அப்பொறுப்பிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு உள்ள நிலையில், விழுப்புரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஏன் அவர்களை கட்சியிலிருந்து எடப்பாடி நீக்கினார் என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
அதிமுகவில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர்.மேலும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் அவர்கள் மீதும் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பாக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தார். இவர் சட்டமன்றத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர் பதவியை பறித்தார். இந்த நிலையில் இதுவரை தனி அணியாகவே செயல்பட்டு வருகிறார் சி.வி சண்முகம். இதற்கிடையே சிவிஎஸ் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் பரவியது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திண்டிவனம் மற்றும் செஞ்சியில் அதிமுக நகர வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவி சண்முகம் அதர்வாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது இந்த நிலையில் சிவி சண்முகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 முக்கிய மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வகித்து வந்த அப்பொறுப்பிலிருந்து நீக்கி உள்ளார். மேலும் திண்டிவனம் வல்லம் செஞ்சி, மயிலம், ஒலக்கூர் உள்ளிட்ட ஒன்றிய செயலாளர்களையும் பொறுப்பிலிருந்து நீக்கி உள்ளார். இதற்கு சி.வி சண்முகம் அதர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது. அதிமுகவில் ஆரம்பத்தில் இருந்தே எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் தான் இருந்தார் சிவி சண்முகம். அதே நேரத்தில் மாவட்ட செயலாளர் பதவி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக சில சமரசங்களை செய்து கொண்டார். 2026 தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என சொன்னார் சண்முகம். ஆனால் எடப்பாடி அதனை ஏற்கவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகாவது கூட்டணி அமைத்தால் சிலர் அமைச்சராகலாம் என சொன்ன சண்முகத்தின் பேச்சை எடப்பாடி கேட்கவில்லை. திமுக ஆதரவோடு தான் முதலமைச்சராகலாம் என எடப்பாடி நினைத்தாராம். இதனால்தான் வெளிப்படையாகவே கோபமான வார்த்தைகளை உதிர்த்து இருக்கிறார் சண்முகம். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட அதிமுகவை ஒட்டுமொத்தமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வைக்க திட்டமிட்டு இருந்தார் சண்முகம். அதனால்தான் அவரது பதவியை பறிக்கப்பட்டது. இதற்கிடையே மாவட்ட, நகர், ஒன்றிய செயலாளர்களை தொடர்பு கொண்ட சிவி சண்முகம் ஒட்டுமொத்தமாக விழுப்புரம் மாவட்ட அதிமுகவை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வைக்க சிவிஎஸ் பேச்சு நடத்தியிருக்கிறார். இதனை தெரிந்து கொண்டு தான் தற்போது அந்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிச்சாமி காலி செய்து இருக்கிறார் என்கின்றனர் விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர்.எடப்பாடி பழனிச்சாமி
சிவி சண்முகம்
அதிருப்தி
திமுக ஆதரவு
நீக்கம் ஏன்?