வாஷிங்டன்: ஒரு நாள் என்பது இரவு, பகல் என இரண்டும் சேர்ந்தது. ஆனால், பகல் மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும். அப்படியொரு சர்ச்சை முயற்சியை தான் அமெரிக்கா எடுத்துள்ளது. சாட்டிலைட் மூலம் இரவு நேரத்தில் சூரிய ஒளியை பூமிக்கு திருப்பிவிடும் ஒரு வினோத முயற்சிக்கு அமெரிக்கா ஒப்புதல் கொடுத்துள்ளது. இதுவே இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
அமெரிக்காவில் பொதுவாக நாம் கனவிலும் யோசிக்காத பல வினோதங்கள் நடக்கும் அப்படியொரு சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு அமெரிக்கா இப்போது ஒப்புதல் கொடுத்துள்ளது. அதாவது இரவு நேரத்திலும் பூமிக்கு சூரிய ஒளியை பிரதிபலிக்கும் சர்ச்சைக்குரிய சாட்டிலைட் திட்டத்திற்கு அமெரிக்காவின் பெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது. ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் இந்த அனுமதி தரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவை சேர்ந்த ரிப்லெக்ட் ஆர்பிட்டால் (Reflect Orbital) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியுள்ள ஈரெண்டில்-1 (Earendil-1) என்ற சாட்டிலைட்டிற்கு தான் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 60 அடி அகலமுள்ள சதுர வடிவ கண்ணாடியுடன் இந்த சாட்டிலைட் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவையான போது சூரிய ஒளியை தரும் திட்டத்தை சோதிப்பதே இதன் முதன்மை நோக்கம். அதாவது சூரிய ஒளியை பிரதிபலித்து, அதன் மூலம் இரவு நேரத்திலும் கூட பூமியின் குறிப்பிட்ட பகுதிகளில் ஒளியை செலுத்துவதே இதன் நோக்கம். சுமார் 640 கி.மீ. உயரத்தில் சுற்றிவரும் இந்த சாட்டிலைட், 5 கிமீ பரப்பளவு கொண்ட ஒரு பகுதிக்கு சூரிய ஒளியை அனுப்பும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. அதுதான் இரவு நேரத்தில் ஒளியை கொடுக்க நிலா இருக்கே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், இந்த சாட்டிலைட் மூலம் கிடைக்கும் ஒளி என்பது முழு நிலவு சமயத்தில் கிடைக்கும் ஒளியை விட நான்கு மடங்கு பிரகாசமாக இருக்கும். அதேநேரம் இது வெறும் ஆரம்ப கட்ட சோதனை மட்டுமே.! அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2035க்குள் இதுபோல 50,000 பிரதிபலிப்பு சாட்டிலைட்களை விண்ணில் நிலைநிறுத்துவதே இந்த நிறுவனத்தின் நீண்டகால திட்டமாக உள்ளது. இதன் மூலம் சோலார் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.. இக்கட்டான நேரத்தில் ஒளி தேவைப்பட்டால் அதை தர முடியும். மேலும், குறிப்பாக விவசாய துறைக்கும் இது மிக பெரியளவில் உதவும் என்று அந்நிறுவனம் சொல்கிறது. ஆனால், இந்தத் திட்டம் பல்வேறு கவலைகளையும் எழுப்பியுள்ளது. அமெரிக்க வானியல் சங்கம் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என கண்டித்துள்ளது. சாட்டிலைட் மூலம் வானத்தை ஆய்வு செய்யும் வானியல் ஆய்வாளர்களுக்குச் சிக்கலை தரும் என்றும் வானியல் ஆய்வுகளையும் இது பாதிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அத்தோடு திடீரென பிரதிபலிக்கப்படும் ஒளி பைலட்கள் கவனத்தைச் சிதறடிக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டுகிறார்கள். அதாவது திடீரென இதுபோல அதீத ஒளி அடிக்கும்போது, அது தற்காலிக பார்வை இழப்பை கூட பைலட்களுக்கு சில நொடிகள் ஏற்படுத்தலாம் என்றும் அது விபத்திற்கு வழிவகுக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கிறார்கள். மேலும், இரவு நேரத்தில் இதுபோன்ற அதீத ஒளி வரும்போது அது பறவைகளின் இடம்பெயர்வு, பூச்சிகளின் வாழ்வியல் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் சமநிலையையும் பாதிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பாகக் கனடாவின் ரெஜினா பல்கலைக்கழக வானியலாளர் சமந்தா லாலர் கூறுகையில், "ஒரு நாடு தனக்கு தேவை என்பதற்காக உலகின் மற்ற நாடுகளின் இரவு வானத்தை மாற்ற முயல்கிறது. இதை எல்லாம் நினைத்தாலே பயமாக இருக்கிறது" என்றார். இவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் கூட அதையும் தாண்டி அமெரிக்கா இதற்கு அனுமதி கொடுத்துள்ளது. எனவே, வரும் காலங்களில் இது தொடர்பாக மேலும் பெரிய விவாதங்கள் வெடிக்கும் என்றே தெரிகிறது.சர்ச்சை திட்டம்
50 ஆயிரம் சாட்டிலைட்
எதிர்ப்பு
ஏற்கவே முடியாது