கம்பு மாவு கூழ் இன்ஸ்டன்ட் முறை! இரவு ஊறவைக்காமல் காலையிலேயே டக்குனு செய்யலாமே கம்பு கூழ்!


  • Instant Pearl Millet Porridge Recipe In Tamil: கம்பு ஊறவைத்து, அரைத்து, புளிக்க வைக்க நேரமில்லையே என்று கவலைப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காகவே ஒரு அருமையான தீர்வு இருக்கிறது. பாரம்பரிய முறையில் கம்பு கூழ் செய்ய நீண்ட நேரம் எடுக்கும், ஆனால் இந்த இன்ஸ்டன்ட் முறையில் வெறும் 15 நிமிடங்களில் அதே சுவையுடன் ஆரோக்கியமான கம்பு கூழை நீங்கள் தயார் செய்துவிடலாம்.

    Advertisement

    இந்த இன்ஸ்டன்ட் கம்பு கூழ் செய்முறையில் நாம் கம்பு மாவை நேரடியாகப் பயன்படுத்துவதால், ஊறவைக்கும் வேலை மிச்சமாகிறது. கம்பில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக கோடை காலங்களில் உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்க இது ஒரு சிறந்த இயற்கை பானமாகும்.

    Advertisement

    இதில் சேர்க்கப்படும் மோர் மற்றும் சின்ன வெங்காயம் இதன் சுவையை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. நீங்கள் டயட்டில் இருப்பவர் என்றால், இந்த கூழ் ஒரு முழுமையான காலை உணவாக அமையும்.

    தேவையான பொருட்கள்

    • கம்பு மாவு - 1 கப்
    • தண்ணீர் - 4 கப்
    • புளித்த மோர் - 2 கப்
    • சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
    • பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
    • உப்பு - தேவையான அளவு
    • கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை விளக்கம்

    • முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கம்பு மாவை எடுத்துக்கொண்டு, அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கட்டிகள் ஏதும் இல்லாமல் ஒரு கரண்டியால் நன்றாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
    • பின் அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை அல்லது குக்கரை வைத்து, மீதமுள்ள இரண்டு கப் தண்ணீரை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.
    • அடுத்து தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, நாம் ஏற்கனவே கரைத்து வைத்துள்ள கம்பு மாவை மெதுவாக ஊற்றிக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
    • பிறகு மாவு கெட்டியாகத் தொடங்கும் போது, கைவிடாமல் கிளற வேண்டும், இல்லையெனில் அடியில் பிடித்துவிடும் அல்லது மாவு உருண்டைகளாகக் கட்டி தட்டிவிடும்.
    • அடுத்து சுமார் 10 நிமிடங்கள் கிளறிய பிறகு, மாவின் நிறம் லேசாக மாறி பளபளப்பாகவும், நல்ல கம்பு வாசனை வரத் தொடங்கும் போதும் அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தை இறக்கி நன்றாக ஆறவிடவும்.
    • இறுதியாக கூழ் நன்றாக ஆறியதும், அதில் புளித்த மோர், தேவையான அளவு உப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழைகளைச் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

    இந்த இன்ஸ்டன்ட் கம்பு கூழை மோர் மிளகாய் அல்லது மாங்காய் ஊறுகாயுடன் சேர்த்துப் பருகினால் அதன் சுவை அபாரமாக இருக்கும். என்ன இருந்தாலும் கூழை ஊற வைத்து பிறகு காய்ச்சுவதே சுவையாக இருக்கும். இந்த இன்ஸ்டன்ட் கூழை ஊறவைத்து செய்ய நேரமில்லாதவர்கள் செய்யலாம்.