சென்னை: நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்ததாக வெளியான தகவல் திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக மனைவியின் சிகிச்சைக்காக உதவி கோரி முத்துக்காளை உருக்கமாக பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த சோக செய்தி பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
நகைச்சுவை நடிகராக ரசிகர்களை சிரிக்க வைத்த முத்துக்காளை, நிஜ வாழ்க்கையில் கடுமையான சோதனையை எதிர்கொண்டார். அவரது மனைவி மாலதி கடந்த 19 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தினர் உயிரைப் பிடித்து போராடிக் கொண்டிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலதிக்கு வயது 47 என கூறப்படுகிறது. அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள பகுதியுக்கு கொண்டு கொண்டு செல்லப்படுகிறது. இன்று இரவே இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பலரையும் அதிகமாக பாதித்ததற்கான முக்கிய காரணம், கடந்த சில நாட்களாக முத்துக்காளை தனது மனைவிக்காக ஓடிய விதம்தான். பொருளாதார சிக்கல்களுக்கிடையே மனைவியை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் அவர் பலரிடம் உதவி கோரியிருந்தார். சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கூட வீடியோ மூலம் உதவி கோரி உருக்கமாக பேசியிருந்தார். அந்த வீடியோ வெளியாகியதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அரசு தரப்பிலிருந்தும் உதவி சென்றதாக கூறப்பட்டது. அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் நேரில் மருத்துவமனைக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, சிகிச்சைக்கான உதவிகள் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் "மாலதி குணமடைந்து வீடு திரும்புவார்" என்ற நம்பிக்கை குடும்பத்தினருக்கு இருந்தது. ஆனால் இறுதியில் அந்த நம்பிக்கை உடைந்துவிட்டது. முத்துக்காளை குறித்து பேசும்போது, பலருக்கும் அவர் ஒரு காமெடி நடிகராகத்தான் நினைவுக்கு வருவார். ஆனால் சினிமாவில் அவர் செய்த பயணம் எளிதானதல்ல. சிறிய கதாபாத்திரங்கள், நகைச்சுவை ரோல்கள், ஸ்டண்ட் தொடர்பான பணிகள் என பல ஆண்டுகளாக திரையுலகில் போராடி தனது இடத்தை உருவாக்கியவர். பெரிய நட்சத்திரங்களின் படங்களிலும் சிறிய ஆனால் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். திரையில் எப்போதும் சிரிப்பை கொடுத்தவரின் வாழ்க்கை, நிஜத்தில் இவ்வளவு வேதனையை சந்திக்கிறது என்பதுதான் பலரையும் அதிகமாக பாதித்திருக்கிறது. மனைவியின் உயிரைக் காப்பாற்ற போராடிய கணவன் என்ற கோணத்தில் தற்போது பலரும் முத்துக்காளைக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் தற்போது பலரும் "மனைவியை காப்பாற்ற அவர் முடிந்த அனைத்தையும் செய்தார்", "இந்த வேதனையை தாங்கும் சக்தி கிடைக்க வேண்டும்", "கடவுள் இந்த குடும்பத்துக்கு துணை நிற்க வேண்டும்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு கலைஞன் மேடையில் சிரிப்பை கொடுத்தாலும், மேடைக்கு பின்னால் எவ்வளவு கண்ணீர் இருக்கலாம் என்பதையே இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது. மனைவியை காப்பாற்ற கடைசி வரை போராடிய முத்துக்காளைக்கு தற்போது திரையுலகினரும் ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.நடிகர் முத்துக்காளை மனைவி
முத்துக்காளை மனைவி இறப்பு
நடிகர் முத்துக்காளை வெளியிட்ட வீடியோ