சென்னை: தமிழக அரசியல் வட்டாரத்திலும், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் நடிகர் பாண்டி ரவியின் திடீர் அரசியல் முடிவுதான். கடந்த 39 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியுடன் பயணித்து வந்த அவர், தற்போது கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் பரிச்சயமான முகமாக இருக்கும் பாண்டி ரவி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். அதே நேரத்தில், அரசியல் களத்திலும் நீண்ட காலமாக ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாண்டி ரவி, தனது முடிவை அறிவித்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
"1987-ம் ஆண்டு முதல் என் தந்தையை பின்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியில் பயணித்து வருகிறேன். இன்று சில தவிர்க்க முடியாத காரணங்களால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், எனக்கு வழங்கப்பட்டிருந்த மாநில பிரச்சார பிரிவு பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகிக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார். தனது அதிருப்திக்கான காரணத்தையும் அவர் வெளிப்படையாக கூறினார். "நான் பெருமைக்காக சொல்லவில்லை. ஆனால் என்னுடைய தகுதி, அனுபவம், மக்கள் தொடர்பு ஆகியவற்றை பாரதிய ஜனதா கட்சி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பாண்டிச்சேரியில் 10 லட்சம் பேர் இருந்தால் அதில் 7 முதல் 8 லட்சம் பேருக்கு என்னை தெரியும். நான் எந்த பதவியையும் எதிர்பார்த்து கட்சியில் இருக்கவில்லை. ஆனால் என்னால் இன்னும் நிறைய செய்ய முடியும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை" என்று வருத்தத்துடன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் காலங்களில் கட்சிக்காக தீவிரமாக உழைத்ததாகவும் கூறினார். "எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை முழு அர்ப்பணிப்புடன் செய்தேன். தேர்தல் பிரச்சாரங்களில் கடுமையாக உழைத்தேன். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு கட்சிக்காக இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கான வழிகள் இல்லாதது என்னை ஏமாற்றமடைய வைத்தது" என்றார். பேட்டியின் போது அதிகம் கவனம் ஈர்த்தது அண்ணாமலை குறித்து அவர் பேசிய கருத்துகள்தான். "அண்ணாமலை சார் பாரதிய ஜனதா கட்சியின் மிகப்பெரிய பொக்கிஷம். அவர் கட்சியை விட்டு சென்றதால் எந்த பாதிப்பும் இல்லை என்று சிலர் கூறுவது தவறு. தமிழிசை சௌந்தரராஜன் போன்ற மூத்த தலைவர்கள் கூட அதுபோன்று பேசுவது வருத்தமளிக்கிறது. அது அவர்களது மனநிலையை காட்டுகிறது" என்று நேரடியாக விமர்சித்தார். அண்ணாமலையின் அரசியல் பயணத்தைப் பற்றி பேசிய பாண்டி ரவி, "தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணம் அண்ணாமலை. அவர் நடைபயணம் மேற்கொண்டபோது மக்களிடையே பெரிய மாற்றம் ஏற்பட்டது. 2 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி 12 சதவீதமாக உயர்ந்தது. ஊழல் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்பதே அவரது கனவு. திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி, ஊழலுக்கு மாற்றாக ஒரு அரசியல் சக்தி உருவாக வேண்டும் என்பதற்காக அவர் போராடினார்" என்று கூறினார். பின்னர் தன்னை அண்ணாமலையுடன் ஒப்பிட்டு பேசப்படுவது குறித்து அவர் அளித்த பதில் கவனம் பெற்றது. "என்னை அண்ணாமலை சாருடன் ஒப்பிடவே முடியாது. அவர் ஒரு மலை. நான் ஒரு கடுகு. ஆனால் அவர் தமிழக அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தை யாராலும் மறுக்க முடியாது" என்று கூறினார். நடிகர் பாண்டி ரவி, பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட தொடர்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்', சின்னதம்பி மூலம் இல்லத்தரசிகளுக்கும் பரிச்சயமான முகமாக மாறியுள்ளார். அரசியல் மற்றும் கலைத்துறையை இணைத்து பயணித்து வந்த அவர், தற்போது பாஜகவிலிருந்து விலகியிருப்பது புதிய அரசியல் அத்தியாயத்திற்கான தொடக்கமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. பாஜகவிலிருந்து விலகிய பாண்டி ரவி அடுத்ததாக எந்த அரசியல் கட்சியில் இணையப் போகிறார்? அல்லது முழுமையாக கலைத்துறையில் கவனம் செலுத்தப் போகிறாரா? என்பது குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் அவரது இந்த அறிவிப்பும், குறிப்பாக அண்ணாமலை குறித்து அவர் கூறிய கருத்துகளும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விவாதத்தை கிளப்பி வருகின்றன.நடிகர் பாண்டி ரவி பேட்டி
தேர்தலுக்காக உழைத்தேன்
அண்ணாமலை ஒரு பொக்கிஷம்
வாக்கை மாற்றியவர்
அண்ணாமலையுடன் ஒப்பீடு
யார் இந்த பாண்டி ரவி?
பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
அடுத்த கட்டம் என்ன?