சென்னை: சில மனிதர்களின் வாழ்க்கை எப்படி முடியும் என்றே கூற முடியாது. பசி ஷோபா, படாபட் ஜெயலட்சுமி போன்ற சிறந்த நடிகைகள் எல்லாம் தங்களது உச்சக்கட்ட சினிமா வாழ்க்கையின் போது திடீரென தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வரிசையில் நடிகை மயூரியும் ஒரு பெரிய உயரத்தை அடைய வேண்டியவர், ஆனால் காலம் வேறொரு முடிவை எடுத்துவிட்டது" என்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.
மறைந்த நடிகை மயூரி குறித்து aramnaadu சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "மயூரி முதன்முதலில் அறிமுகமானது 'கோபாலா கோபாலா' படத்தில்தான். அவர் பிறந்தது கல்கத்தாவில். அவருடைய அப்பா பெயர் குமார், அம்மா சாந்தி. அவருக்கு ஒரு அண்ணன் உள்ளார்.
ஆரம்பத்தில் கல்கத்தாவில் இருந்த அவர்கள் குடும்பம், பிறகு பெங்களூருக்கு மாறி, பிறகு சென்னைக்கு வந்து, படித்து பிகாம் பட்டமும் பெற்றார். மயூரி ஒரு தமிழ்ப் பெண், பூர்வீகம் தாம்பரம்தான். இப்பொழுதும் அவர்கள் சொந்த வீடு சென்னை அண்ணாநகரில் உள்ளது. மயூரியின் உண்மையான பெயர் ஷாலினி. கோபாலா கோபாலா படத்திற்காகத்தான் மயூரி என்று பெயர் மாற்றம் செய்து அறிமுகப்படுத்தினார்கள். அவர் 15 வயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 22 வயதிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்தார். வெறும் 7 ஆண்டுகள் மட்டும்தான் அவருடைய சினிமா பயணமே நீடித்திருந்தது. மலையாளத்தில் அவர் நடித்த "சம்மர் இன் பெத்தலகம்" படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. மயூரியின் சிறப்பம்சமே அவருடைய கவர்ச்சியான, வசீகரமான கண்கள்தான். அந்த காலகட்டத்தில் மயூரி சினிமாவுக்கு வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் நடிகை சில்க் ஸ்மிதா காலமானார். அதனால், சில்க் ஸ்மிதாவின் இடத்தை மயூரி நிரப்புவார் என்ற பேச்சு பரவலாக இருந்தது. 'ஆகாச கங்கா' என்ற மலையாளப் பேய் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதில் அவர் கங்கா என்ற கதாபாத்திரத்தில் பேயாக மிக பிரமாதமாக நடித்திருந்தார். கேரளாவில் மயூரி என்று கூறுவதை விட கங்கா என்று கூறினால் தான் அனைவருக்கும் தெரியும். அந்தத் திரைப்படத்தின் தாக்கத்தால் தான், பின்னாளில் தமிழில் வெளியான சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் கேரக்டருக்கு கங்கா என்று பெயர் வைக்கப்பட்டது. தமிழிலும் அவருக்கு நல்ல மார்க்கெட் இருந்தது. சிம்புவுடன் 'மன்மதன்' படத்தில் எதிர்மறை சாயல் கொண்ட கேரக்டரில் நடித்தார். தனுஷின் புதுக்கோட்டையிலிருந்து சரவணன், விசில், கனா கண்டேன் படங்களிலும் நடித்தார். ஏய் படத்தில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த நகைச்சுவை கேரக்டரில் மிகவும் பிரபலமானது. 7G ரெயின்போ காலனி படத்திலும் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். அவர் நடித்த படங்கள் எல்லாம் வெற்றி பெற்றவை. ஆனால், திடீரென்று 2005 ஜூன் 16 அன்று இரவு 11 மணியளவில் மயூரி அண்ணாநகர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்..மோனிஷா, பிரதிக்ஷா போன்ற நடிகைகள் சிறிய வயதில் இறந்தது போல இவரும் துரதிர்ஷ்டவசமாக காலமானார். அவருடைய இறப்பிற்கான காரணத்தை அவர் குடும்பத்தார் யாரும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. அன்று இரவு 8 மணியளவில் எல்லாரோடும் சேர்ந்து டிபன் சாப்பிட்டுவிட்டு ரூமுக்கு தூங்க சென்றுள்ளார். இரவு 10:30 மணியளவில் அவருடைய அம்மா கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை. அவருடைய அப்பாவும் தட்டிப் பார்த்துவிட்டு, சந்தேகமடைந்து ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மயூரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். பதறியடிப் போய் கதவை உடைத்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் நடைபெற்றது. அவருடைய தற்கொலைக்குக் காதல் தோல்வி, வாய்ப்புகள் இல்லாத விரக்தி எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. சிலர் அவருக்கு வயிற்றில் புற்றுநோய் இருந்தது என்றும், கடுமையான வயிற்று வலி தாங்க முடியாமல் தான் தற்கொலை செய்துகொண்டார் என்றும் சொன்னார்கள்.. ஆனால் போலீஸ் கைப்பற்றிய மரணக் கடிதத்தில், 'என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை. எனக்கு வாழப் பிடிக்கவில்லை, வாழ்க்கையின் மீது பெரிய ஈடுபாடு இல்லாததால் தற்கொலை செய்துகொள்கிறேன்' என்று மட்டும்தான் எழுதி வைத்திருந்தார். நடிகை சங்கீதாவும் மயூரியும் சம்மர் இன் பெத்தலகம் படத்தில் நடித்தபோது ஒரே ரூமில் தங்கியுள்ளனர். மயூரி ஷூட்டிங் முடிந்து வந்ததும், ரூமில் பெரிய டெடி பேர் பொம்மைகளை வைத்துக்கொண்டு ஒரு குழந்தையைப் போல விளையாடுவாராம். கவர்ச்சியாக நடித்தாலும், தனிப்பட்ட முறையில் மிகவும் குழந்தைத்தனமான, வெகுளியான பெண் மயூரி என்று சங்கீதா பதிவு செய்துள்ளார். சினிமா வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் கையாளும் பக்குவம் மயூரியிடம் இல்லை என்றும், தான் நேசித்தவர்கள் தன்னை விட்டு விலகுவதைத் தாங்கும் மனவலிமை அவருக்கு இல்லை என்றும் கூறியுள்ளார். நடிகர் கிருஷ்ணா குடும்பத்துடனும், கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரியுடனும் மயூரிக்கு நல்ல நட்பு இருந்தது. சில மனிதர்களின் வாழ்க்கை எப்படி முடியும் என்றே கூற முடியாது. பசி ஷோபா, படாபட் ஜெயலட்சுமி போன்ற சிறந்த நடிகைகள் எல்லாம் தங்களது உச்சக்கட்ட திரையுலக வாழ்க்கையின் போது திடீரென தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வரிசையில் மயூரியும் ஒரு பெரிய உயரத்தை அடைய வேண்டியவர், ஆனால் காலம் வேறொரு முடிவை எடுத்துவிட்டது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.நடிகை மயூரி
சம்மர் இன் பெத்தலகம்
புதுக்கோட்டையிலிருந்து சரவணன்தூக்கில் தொங்கிய நடிகை
டெடி பேர் பொம்மைகள்
பசி ஷோபா, படாபட் ஜெயலட்சுமி