சென்னை: "எஸ்.ஜானகியின் இறுதிச்சடங்குகள் தமிழ்நாட்டில் நடந்திருந்தால் மக்கள் அனைவரும் தங்களது அஞ்சலியைச் செலுத்திப் பெரிய அளவில் மரியாதை செய்திருக்கலாம். விஜய் முதலமைச்சராக இருப்பதால், இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்பட்டிருக்கக்கூடும்" என்று கருத்து தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் சேகுவேரா. அதுமட்டுமல்லாமல், ஜானகி அம்மா மறதி நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் மாபெரும் ஆளுமை எஸ். ஜானகியின் மறைவு குறித்து தி ஜென்டில்மேன் யூடியூப் சேனலில் சேகுவேரா பேசியதாவது:
"தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய முக்கியமான நபர்கள் சமீபத்தில் இறந்து கொண்டே வருவதை நாம் பார்க்கிறோம். பாரதிராஜா இறந்தார்.. 2 வாரத்திலேயே பாக்யராஜ் மறைந்தார்.. இப்போது எஸ். ஜானகி அம்மாவும் இறந்துள்ளார். இந்த 3 பேருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.. இவர்கள் 3 பேருமே 16 வயதினிலே படத்தின் மூலம் தங்களது சினிமா பயணத்தில் ஒரு மாபெரும் உச்சத்தைத் தொட்டவர்கள்.
16 வயதினிலே அந்த படத்தில் பணியாற்றிய ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். ஒரே ஒரு படம் எத்தனை பேருக்கும் முகவரியாக அமைந்திருக்கிறது பாருங்கள் தனது 18வது வயதிலேயே அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களிடம் விருது பெற்றுள்ளார் ஜானகி அம்மா.. இந்திய இசைத்துறையில் ஆண் குரலில் பாடக்கூடிய பெண் பாடகிகள் மிகவும் குறைவு.. அந்த வகையில் ஜானகி அம்மா ஆண் குரலிலும் பாடியிருக்கிறார். மறதி நோயால் அவதி ஜானகி அம்மாவுக்கு என்னதான் விருதுகள் வழங்கப்பட்டிருந்தாலும், தாதா சாகேப் பால்கே, சிவாலியர் விருது போன்ற உயரிய அங்கீகாரங்கள் வாழ்நாளில் வழங்கப்படவில்லை. சில ஆளுமைகளுக்கு அவர்கள் காலமான பிறகு கூட விருதுகள் வழங்கப்பட்ட வரலாறுகள் உள்ளன.. அந்த வகையில் இனிமேலாவது ஜானகி அம்மாவுக்கு அந்த விருதுகள் வழங்கப்படலாம். குறிப்பாக நாட்டின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அவர் மறைந்த பிறகாவது அவருக்கு வழங்கப்பட வேண்டும் ஜானகி அம்மா தனது கடைசி காலம் வரை பாடிக்கொண்டேதான் இருந்தார். கடந்த 2, 3 வருடங்களுக்கு முன்பு நினைவாற்றலை இழந்த பிறகுதான் இவரால் பாட முடியாமல் போனது. வயது முதிர்வு, உடல்நலக் குறைவினால் ஏற்பட்ட இந்த மறதி பிரச்சனையால் தான் யார் என்பதையே அவர் மறந்துவிட்டார். தான் யாரென்பதை மறந்த கொடுமை இந்நிலை மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால், இந்த நிமிடம் வரை 88 வயதிலும் அவரால் பாடியிருக்க முடியும். பொதுவாக 70 வயதைக் கடந்தாலே குரலில் வயோதிகம் தெரிந்துவிடும். ஆனால், இவர் தனது 85 வயது வரை 25 வயது ஹீரோயினுக்கு பொருந்துவது போன்ற இளமையான குரலில் பாடி சாதனை படைத்துள்ளார். அதற்கு முன்பாக, தனது காதல் கணவர் மற்றும் மகன் இறந்த துக்கங்களைச் சந்தித்த போதும் அவர் தொடர்ந்து பாடினார். ஜானகி அம்மா தனது கடைசி நாட்களில் மறதி நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். தான் யார் என்பதையே அவரே மறந்துவிடுவது என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடுமையாகும். ஒரு மனிதர் தான் யார் என்பதை மறந்துவிட்டால் அவருக்கும் கஷ்டம், அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் அது கஷ்டம். முதலமைச்சர் விஜய் அவரது இறுதிச் சடங்குகள் தமிழ்நாட்டில் நடைபெறாமல் கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இந்த இறுதிச் சடங்கு நடந்திருந்தால் மக்கள் அனைவரும் தங்களது அஞ்சலியைச் செலுத்திப் பெரிய அளவில் மரியாதை செய்திருக்கலாம். தமிழ்நாட்டில் இப்போது விஜய் அவர்கள் முதலமைச்சராக இருப்பதால், இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டிருக்கக்கூடும். இன்றைய தினம் ஜானி அம்மா நம்முடன் இல்லை என்றாலும், அவர் பாடிய பாடல்கள் எப்போதும் நம்மோடு இருக்கப் போகிறது என்ற நிறைவு நமக்கு இருக்கிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.