பெண்கள் வாழ தகுதியற்ற நாடு தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம்


  • சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் உயிருக்கு போராடிய அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வரும் நிலையில், நடிகையும் காமெடி கலைஞருமான அறந்தாங்கி நிஷா வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    மனம் உடைந்த அறந்தாங்கி நிஷா

    விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அறந்தாங்கி நிஷா, இந்த சம்பவம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகுந்த வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

    அதில், "பெண்கள் வாழ தகுதியற்ற நாடு தமிழ்நாடு என்று முடிவு செய்து விடுங்கள். போதும்... பெண்ணாக பிறந்ததைத் தவிர எங்கள் உடல் எந்த பாவமும் செய்யவில்லை. அந்தக் குழந்தைக்கு இரங்கல் தெரிவிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இதற்கு நீதி கேட்க எனக்கு உரிமையும் இல்லை. போதும்... இனி இந்த நாட்டில் பெண் குழந்தைகளே பிறக்காமல் இருக்க இறைவன் சபிக்கட்டும்..." என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

    ஒரு தாயின் கோபம்

    நிஷாவின் இந்த பதிவு வெறும் சமூக வலைதள பதிவு அல்ல, ஒரு பெண்ணின் வலி என்றும், ஒரு தாயின் ஆதங்கம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    என்ன நடந்தது?

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவர் தங்களது மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். கடந்த ஜூன் 14-ம் தேதி மாலை, அவர்களது 3 வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போனது. குழந்தையை குடும்பத்தினர் பல இடங்களில் தேடிய நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு அருகிலிருந்த புதர்ப் பகுதியில் ரத்தக் காயங்களுடன் குழந்தை கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனடியாக மீட்கப்பட்ட அந்த சிறுமி முதலில் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் போராடினர் ஆனால் காப்பாற்ற முடியவில்லை. ஸ்டான்லி மருத்துவமனையில் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசம் முதல் அறுவை சிகிச்சை வரை மருத்துவர்கள் பல மணி நேரம் போராடியதாக கூறப்படுகிறது. ஆனால் உடல்ரீதியான கடுமையான வன்முறையால் ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கு காரணமாக, ஜூன் 15-ம் தேதி காலை அந்த சிறுமி உயிரிழந்தார்.

    ஒரு 3 வயது குழந்தை இவ்வளவு கொடூரமான தாக்குதலை சந்தித்திருக்கிறது என்ற தகவலே மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    10th ரிசல்டில் அறந்தாங்கி நிஷா மகன் மதிப்பெண் இவ்வளவுதானா! ஆனாலும் அவர் சொன்ன விஷயம் ஹைலைட்

    கைது செய்யப்பட்ட இளைஞர்

    இந்த வழக்கில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைக்கு பிஸ்கெட் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும் அப்பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தில் மேலும் யாரேனும் தொடர்புடையவர்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது ஒரே நபர் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இவ்வளவு கேவலமாக பண்ணுறீங்களே.. நடந்தது இதுதான்! CWC திவாகர் பிரச்சனைக்கு அறந்தாங்கி நிஷா விளக்கம்

    கொதித்தெழுந்த மக்கள்

    சிறுமியின் உயிரிழப்பு தகவல் வெளியானதும் அப்பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். "3 வயது குழந்தைக்கும் பாதுகாப்பு இல்லையா?", "எங்கள் குழந்தைகளை எப்படி வெளியே அனுப்புவது?" என்று பெற்றோர்கள் கதறினர். இது ஒரு குழந்தையின் மரணம் மட்டுமல்ல ... குழந்தைகள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்ற ஒவ்வொரு பெற்றோரின் நம்பிக்கையையும் உலுக்கிய சம்பவமாக மாறியுள்ளது.

    English Summary

    Actress and comedian Aranthangi Nisha has expressed deep sorrow and anger following the reported death of a three-year-old girl in Tamil Nadu after an alleged sexual assault. In a strongly worded social media post, Nisha questioned the safety of women and girl children, describing her grief as both a woman and a mother. Her emotional message quickly gained traction online, with many users sharing and discussing her concerns about child safety and violence against women. The tragic incident has triggered widespread public outrage, with political leaders, social activists, and members of the entertainment industry calling for justice and stronger protection measures for children. Social media users have echoed concerns about public safety, accountability, and the need for stricter action against crimes involving minors. Nisha’s statement has become one of the most widely shared reactions to the incident, reflecting the emotional response of many people across the state.