சென்னை: "மாஸ்டர் மகேந்திரனை கலாய்த்த வீடியோ ட்ரெண்ட் ஆன நேரத்தில்... பாவா லட்சுமணனின் கண்ணீர் பேட்டி ரசிகர்களை உலுக்கி இருக்கிறது. ஒரு பக்கம் பழைய காமெடி வீடியோக்கள் வைரலாக, மறுபக்கம் 'எனக்கு தங்க ஒரு வீடு கூட இல்லை' என்று கதறியிருக்கும் பாவா லட்சுமணனின் தற்போதைய நிலை தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்த மனிதர் இன்று காலில் 3 விரல்களை இழந்து, வாய்ப்புகளும் இல்லாமல், வாழ்க்கையை நகர்த்த போராடிக் கொண்டிருப்பதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு தனி அடையாளம் உண்டு. அந்த வரிசையில் ரசிகர்கள் மறக்க முடியாத ஒரு முகம் பாவா லட்சுமணன். குறிப்பாக வடிவேலுவுடன் இணைந்து நடித்த 'மாயி' திரைப்படத்தில் அவர் செய்த காமெடிகள் இன்றும் மீம்ஸ் உலகில் செம்ம ட்ரெண்டாக இருக்கின்றன. "மாயி அண்ணா வந்திருக்காக... மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக... வா மாமா மின்னல்!" என்ற வசனம் இன்றும் சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த வசனத்தால் ரசிகர்களை சிரிக்க வைத்த மனிதர், இன்று தனது வாழ்க்கை வேதனையை சொல்லி கண்ணீர் வடிப்பது பலரையும் கலங்க வைத்துள்ளது. சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாவா லட்சுமணன், தனது தற்போதைய நிலை குறித்து உருக்கமாக பேசியுள்ளார். "நான் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக இருக்கிறேன். ஆரம்பத்தில் புரொடக்ஷன் மேனேஜராக வேலை பார்த்தேன். அதன் பிறகுதான் நடிகனாக மாறினேன். மாயி படம் எனக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. ஆனால் சமீப காலமாக எனக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. அதற்கிடையில் கர்நாடகாவில் ஒரு தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு ஜெனரேட்டர் மீது கால் வைத்துவிட்டேன். அப்போது பெரிதாக வலி தெரியவில்லை. ஆனால் சில நாட்களில் கால் கடுமையாக வீங்கியது. மருத்துவமனையில் பரிசோதித்தபோது காலில் மோசமான தொற்று பரவியிருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க மூன்று விரல்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறினர். வேறு வழியில்லாமல் அறுவை சிகிச்சை செய்து மூன்று விரல்களையும் அகற்ற வேண்டியிருந்தது" என்று தெரிவித்துள்ளார். அதன் பின்னர்தான் அவரது வாழ்க்கையில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. "விரல்களை எடுத்த பிறகு என்னால் நடக்க முடியாது என்ற வதந்தி சினிமா வட்டாரத்தில் பரவிவிட்டது. அதனால் எனக்கு வாய்ப்புகளே வரவில்லை. உண்மையில் நான் நடக்கிறேன், வேலை செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் வாய்ப்பு மட்டும் வரவில்லை" என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "இப்போது நான் மிகவும் கஷ்டமான சூழலில் இருக்கிறேன். வாடகை வீட்டில் கூட இருக்க முடியாத நிலை. வீட்டைக் காலி செய்யச் சொல்லிவிட்டார்கள். நண்பர்கள் உதவியால் தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் டிவி பாலா, நடிகர் ஜீவா போன்றவர்கள் மருத்துவ செலவுக்கும் சாப்பாட்டுக்கும் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்கள். ஆனால் எனக்கு ஒரு நிரந்தரமான வீடு வேண்டும். முதலமைச்சர் விஜய் எனக்கு உதவி செய்தால் என் வாழ்க்கையின் கடைசி காலத்தை நிம்மதியாக கழிக்க முடியும். அவரை நேரில் சந்திக்க பலமுறை முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை" என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கரண்ட் கட் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதை தொடர்ந்து அவரை பலரும் கலாய்க்க தொடங்கினர். அப்போது ஏற்கனவே பாவா லட்சுமணன் அளித்திருந்த ஒரு பழைய பேட்டி மீண்டும் வைரலானது. அதில், சிறுவயதில் ஒரு படத்தில் நடிக்க வந்த மாஸ்டர் மகேந்திரன் படப்பிடிப்பு தளத்தில் அதிகமாக பேசிக் கொண்டிருந்ததால் இயக்குநர் கோபப்பட்டு அவரை அங்கிருந்து அனுப்பி வைத்த சம்பவத்தை நகைச்சுவையாக பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவை ரசிகர்கள் தற்போது மீண்டும் ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர். ஒருபுறம் அந்த பழைய வீடியோ மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்க, மறுபுறம் அதே பாவா லட்சுமணன் தனது வாழ்க்கையின் மிகக் கடினமான காலத்தை சந்தித்து வருவதாக கூறியிருப்பது ரசிகர்களை உருக வைத்துள்ளது. ஒரு காலத்தில் மற்றவர்களை சிரிக்க வைத்த மனிதர் இன்று உதவி கேட்டு கண்ணீர் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது, தமிழ் சினிமாவின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.பாவா லக்ஷ்மணனின் காமெடி
பாபா லட்சுமணன் பேட்டி
வாழ்க்கையை கெடுத்த வதந்தி
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம்
பழைய பேட்டி