சென்னை: தமிழ் சினிமாவை கிராமத்தின் மண்வாசனையால் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்திய இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் உயிரிழந்து 24 மணி நேரத்தைக் கடந்துவிட்ட நிலையிலும், அவரை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னையின் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் முதலில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. காலை முதல் நள்ளிரவு வரை ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் என நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
வாழ்நாள் முழுவதும் கிராமத்தின் கதைகளை பேசிய பாரதிராஜா, தன்னுடைய இறுதி பயணமும் சொந்த மண்ணில்தான் நிறைவடைய வேண்டும் என்று விரும்பியதாக கூறப்படுகிறது. அவரது அந்த ஆசையை மதித்து, குடும்பத்தினர் அவரது உடலை சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேனியில் பாரதிராஜாவின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மனதை உருக்கும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. வெகு தொலைதூர கிராமங்களில் இருந்தும் பெண்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். சிலர் குழந்தைகளை கையில் ஏந்தியபடி கண்ணீர் மல்க பாரதிராஜாவுக்கு மரியாதை செலுத்திய காட்சிகள் அங்கிருந்த அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது. "அவருடைய படங்களை பார்த்துதான் நாங்கள் வளர்ந்தோம். அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போல" என்று பல பெண்கள் கண்ணீருடன் கூறியதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். பாரதிராஜாவின் மறைவால் மிகவும் உடைந்துபோனவர்களில் நடிகை ராதிகா சரத்குமாரும் ஒருவர். நேற்று நீலாங்கரையில் பாரதிராஜாவின் உடல் வைக்கப்பட்டிருந்தபோது, நீண்ட நேரம் அவரது உடலருகே நின்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ராதிகா, இன்று மீண்டும் தேனிக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இரண்டு நாட்களாக தொடர்ந்து அவரது இறுதி நிகழ்வுகளில் பங்கேற்று வருவது, பாரதிராஜா மீது அவர் வைத்திருந்த அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளது. தேனியில் நடைபெறும் இறுதி நிகழ்வில் நடிகை சுஹாசினி, நடிகர் விக்னேஷ் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். பல பிரபலங்கள் அங்கேயே அமர்ந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருவதோடு, இறுதி ஊர்வலம் வரை தங்கியிருந்து மரியாதை செலுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக நடிகர்களுக்கு கிடைக்கும் ரசிகர் கூட்டம், பாரதிராஜாவுக்கு கிடைத்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதற்கு காரணம் அவர் வெறும் இயக்குநர் மட்டுமல்ல. கிராமத்து மக்களின் வாழ்க்கையை, அவர்களின் காதலை, வலியை, உறவுகளை திரையில் உயிர்ப்பித்த மனிதர் என்பதுதான். அதனால்தான் இன்று அவரது உடல் முன் நிற்பவர்கள் ஒரு பிரபலத்தை வழியனுப்ப வரவில்லை. தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்த துயரத்தோடு கண்ணீர் சிந்தி வருகின்றனர். தேனியில் குவிந்திருக்கும் ரசிகர்களின் கண்களில் ஒரே கேள்விதான் தெரிகிறது. "இத்தனை கதைகளை சொன்ன மனிதர் இனி இல்லை என்பதை எப்படி நம்புவது?" அவரது உடல் இன்று மண்ணோடு மண்ணாக கலந்தாலும், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களும், கிராமத்து மனிதர்களின் உணர்வுகளும், தமிழ் சினிமாவுக்காக அவர் செய்த பங்களிப்புகளும் என்றும் ரசிகர்களின் மனதில் உயிரோடு வாழும் என்பதில் சந்தேகமில்லை.பாரதிராஜாவின் கடைசி ஆசை
கைக்குழந்தையுடன் வந்த பெண்கள்
ராதிகாவின் பாசம் நெகிழ்ச்சி
தேனியில் குவிந்த திரையுலகம்
2 வருஷமா போராட்டம்.. 3 மாசத்துக்கு முன்பு பேசினேன்! அப்போது கூட.. பாரதிராஜா பற்றி நெப்போலியன் உருக்கம்
ஒரு இயக்குநருக்காக இவ்வளவு மக்கள்
உடல் மட்டுமே மறைந்தது