சென்னை: தமிழ் சினிமாவின் மண்வாசனை மாறாத அடையாளமாக வாழ்ந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவு செய்தி இன்று திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு இயக்குனர் மறைந்திருக்கலாம். ஆனால் ஒரு காலம் முடிந்துவிட்டது என்ற உணர்வுதான் இன்று ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரிடமும் காணப்படுகிறது.
பாரதிராஜா என்ற பெயர் வெறும் இயக்குனரின் பெயர் அல்ல. தமிழ் சினிமாவை கிராமங்களுக்குள் கொண்டு சென்ற புரட்சியாளர். எண்ணற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரது வாழ்க்கையை மாற்றிய மனிதர். அதனால்தான் அவரது மறைவு செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்கள் முழுவதும் பிரபலங்களின் இரங்கல் பதிவுகள் குவியத் தொடங்கின.
நடிகர் நெப்போலியன் தனது நீண்ட பதிவில் கூறியிருப்பதாவது:"எனது குருநாதர், இயக்குனர் இமயம் திரு பாரதிராஜா அவர்கள் இன்று ஜூன் 10 ஆம் தேதி காலையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி எங்கள் வீட்டில் அனைவரையும் நீங்கா துயரில் ஆழ்த்தியது. 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் என்னை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர். அதன்பிறகு நாடோடித் தென்றல், கேப்டன் மகள், கிழக்குச் சீமையிலே போன்ற படங்களில் தொடர்ந்து என்னை நடிக்க வைத்து வாழ்க்கையில் என்னை உயரச் செய்தவர். தலைவர் கலைஞர் தலைமையில் எனது குருநாதர் தனது முன்னிலையில் எனக்கு திருமணம் செய்து வைத்தவர். எனது வாழ்வில் நீங்கா இடம் பெற்றவர். தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு. அதை யாரும் ஈடு செய்ய முடியாது." என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். நடிகர் சரத்குமார் தனது இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது, "இன்று அதிகாலை மதிப்பிற்குரியவரும், திறமையானவரும், கோடிக்கணக்கான மக்களால் இயக்குனர் இமயம் என்று நேசிக்கப்படுபவருமான திரு பாரதிராஜா அவர்களின் மறைவு செய்தியறிந்து பேரதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அடைந்தேன். இன்று திரையுலகம் தனது பிரகாசமான ஒளிக்கதிரை இழந்து தவிக்கிறது. அவரது தொலைநோக்கு மிக்க கதை சொல்லும் திறன், தனித்துவமான கலைநயம் மற்றும் இந்தியத் திரையுலகிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பு, திரைப்பட உலகிலும் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களிலும் அழியாத தடத்தைப் பதித்துள்ளது. அற்புதமான படைப்புகள் மூலம் தலைமுறைகள் தாண்டி திரைப்பட இயக்குநர்களையும், கலைஞர்களையும், ரசிகர்களையும் ஊக்குவித்த அவர் இன்று நம்முடன் இல்லை என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி வேதனையில் தள்ளப்பட்டிருக்கிறோம். அவர் நம்மை விட்டு பிரிந்திருந்தாலும், திரையுலகிற்காக அவர் ஆற்றிய அசாதாரண பங்களிப்பும், அவர் விட்டுச் சென்ற கலை மரபும் என்றும் நிலைத்திருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை ரேவதி தனது சமூக வலைதளத்தில் மிகவும் சுருக்கமாக ஆனால் மனதை தொடும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் இன்று ஒரு நடிகையாக இங்கே இருப்பதற்கும், நான் நடித்த படங்களை நடிப்பதற்கும் காரணம் பாரதிராஜா சார் தான்." என்று கூறியிருக்கிறார் நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு வெளியிட்ட பதிவு பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. அவர் தனது பதிவில், "நாம் மிகவும் நேசித்த, மதித்த, அன்பு செலுத்திய இயக்குனர் பாரதிராஜா இனி நம்முடன் இல்லை என்பதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அவரது மறைவு தமிழ் சினிமாவின் மீது படர்ந்திருக்கும் ஒரு இருண்ட மேகம் போன்றது. அவரது படங்கள் சினிமாவின் பாடப்புத்தகங்களாக என்றும் இருக்கும். ஒவ்வொரு சினிமா ரசிகருக்கும் அவர் ஒரு பெரிய பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார். எப்போதும் என்னிடம், 'குஷ்பு... இரண்டு ஜடை போட்டுக்கிட்டு என்னோட ஒரு படம் பண்ணணும்' என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அது இப்போது நிறைவேறாத கனவாகவே போய்விட்டது. உங்களை மிகவும் மிஸ் பண்ணுவேன் சார். Rest in Peace. Om Shanti." என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். "பாரதிராஜா ஒரு பல்கலைக்கழகம்" பாரதிராஜாவின் மறைவுக்கு கே.பாக்யராஜ், சத்யராஜ், வெற்றிமாறன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பல இயக்குனர்கள், "பாரதிராஜா ஒரு இயக்குனர் மட்டுமல்ல... அவர் ஒரு பல்கலைக்கழகம்" என்று குறிப்பிட்டு வருகின்றனர். இன்று தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பல நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என நூற்றுக்கணக்கான பேரின் வாழ்க்கையில் முதல் வாய்ப்பை கொடுத்தவர் பாரதிராஜா. அதனால்தான் அவரது மறைவு செய்தியை கேட்டதும், "என் தந்தையை இழந்த உணர்வு", "என் குருவை இழந்துவிட்டேன்", "என் வாழ்க்கையை மாற்றிய மனிதர் போய்விட்டார்" என்ற வார்த்தைகளே அதிகமாக கேட்கின்றன.நெப்போலியன் உருக்கம்
சரத்குமார் பதிவு
நடிகை ரேவதி பதிவு
குஷ்புவின் நிறைவேறாத கனவு
ரசிகர்களை கண்கலங்க வைத்த ஒரு உண்மை