சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்து சில நாட்களே ஆனாலும், அவரது திரைப்படங்களைப் பற்றிய நினைவுகளை விட குடும்பத்தைச் சுற்றியுள்ள விவாதங்கள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.
இறுதி சடங்கின் போது வெளியான சில வீடியோக்கள், குடும்ப உறுப்பினர்கள் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக எழுந்த பேச்சுகள், பின்னர் வெளியான சொத்து தொடர்பான தகவல்கள் என அடுத்தடுத்து பல செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.
இந்த சூழ்நிலையில்தான் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய ஒரு கருத்தை பலரும் சமூக வலைதளங்களில் மீண்டும் பகிரத் தொடங்கியுள்ளனர்.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய அப்துல் கலாம், பெற்றோர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு அறிவுரையை கூறியிருந்தார். "ஒரு மனிதன் தனது வாழ்க்கை முழுவதும் உழைத்து சொத்து சேர்க்கலாம். ஆனால் அந்த சொத்தைவிட முக்கியமானது, அந்த சொத்து யாரிடம் எப்படி செல்ல வேண்டும் என்பதற்கான தெளிவை உருவாக்குவது. பெற்றோர் நல்லபடியாக இருக்கும்போது அவர்களுடைய காலத்திற்கு பிறகு சொத்துக்கள் பிள்ளைகளுக்கு சேரும்படியாக பிரித்து வைத்து விடுவது நல்லது, இல்லையெனில் அவர் இல்லாத பிறகு குடும்பத்தினரே சிக்கலில் சிக்க நேரிடும்" என்பதே அந்த கருத்தின் சாரம். அந்த பேச்சு அப்போது சாதாரண அறிவுரையாக பார்க்கப்பட்டாலும், இன்று பலர் அதை வாழ்க்கை அனுபவத்தின் உண்மையான பாடமாக பார்க்கின்றனர். பாரதிராஜா மீது ரசிகர்களுக்கு இருந்த பாசம் வெறும் சினிமாவுக்காக மட்டுமல்ல. அவர் திரையில் காட்டிய உறவுகளுக்காகவும் தான். "16 வயதினிலே", "முதல் மரியாதை", "கிழக்குச் சீமையிலே", "கருத்தம்மா" போன்ற படங்களில் உறவுகளின் வலி, குடும்பத்தின் அருமை, பாசத்தின் மதிப்பு ஆகியவற்றை ஆழமாக பதிவு செய்தவர் பாரதிராஜா. அதனால்தான் இன்று அவரது குடும்பத்தைப் பற்றி வரும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்களை அதிகமாக பாதிக்கிறது. பாரதிராஜா குடும்பத்திற்கு சொத்து பிரச்சனை இருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம் ஆனால் அவர் மறைந்த சில நாட்களிலேயே குடும்பம் குறித்து இவ்வளவு பேச்சுகள் எழுந்துவிட்டதே என்பதுதான் பலரது கவலையாக இருக்கிறது. ஒரு குடும்பத்தைப் பற்றிய உண்மை நிலை அவர்களுக்கே தெரியும். ஆனால் வெளியுலகம் பார்க்கும் காட்சி வேறு. அந்த காட்சிதான் இன்று பல கேள்விகளை உருவாக்கியுள்ளது. அப்துல் கலாம் கூறிய அறிவுரை வெறும் உயில் எழுதுவது பற்றியது மட்டுமல்ல என பலர் கூறுகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து எதிர்காலம் குறித்து பேச வேண்டும். பொறுப்புகள் என்ன? முடிவுகள் எப்படி எடுக்கப்படும்? குடும்பத்தின் விருப்பம் என்ன? போன்ற விஷயங்களில் தெளிவு இருக்க வேண்டும் என்பதைத்தான் அவர் மறைமுகமாக வலியுறுத்தியதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஏனெனில் பல குடும்பங்களில் சண்டை தொடங்குவது சொத்தால் அல்ல; "என்ன நடக்கப் போகிறது?" என்ற குழப்பத்தால்தான். பாரதிராஜா ஒரு குடும்பத்தின் தலைவர் மட்டுமல்ல. தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டம். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அவர் ஒரு உணர்வு. கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் ஒரு நினைவு. அதனால்தான் சாதாரண குடும்பத்தில் நடக்கும் விஷயங்கள் போல இதையும் மக்கள் பார்க்கவில்லை. அவரது படங்களை பார்த்து வளர்ந்த தலைமுறையினர், "திரையில் உறவுகளின் மதிப்பை கற்றுக் கொடுத்த மனிதரைப் பற்றிய செய்திகளில் ஏன் இப்படி குடும்ப விவாதங்கள் இடம்பெற வேண்டும்?" என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். "பாரதிராஜா விட்டுச் சென்றது வீடுகளும் நிலங்களும் மட்டும் அல்ல. ஒரு தலைமுறை ரசித்த கலை மரபு. அந்த மரபை பாதுகாப்பது குடும்பத்தின் பொறுப்பு மட்டுமல்ல, அவரை நேசித்த அனைவரின் எதிர்பார்ப்பும் கூட." அதனால்தான் அப்துல் கலாம் கூறிய அந்த ஒரு அறிவுரை மீண்டும் பேசப்படுகிறது. அது பாரதிராஜாவை குறை சொல்லுவதற்காக அல்ல. மாறாக, எந்த அளவுக்கு பெரிய மனிதராக இருந்தாலும், வாழ்க்கையின் இறுதியில் குடும்ப ஒற்றுமை மற்றும் தெளிவான முடிவுகள்தான் மிகப்பெரிய பாரம்பரியமாக மாறுகின்றன என்பதை நினைவுபடுத்துவதற்காகவே என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அப்துல் கலாம் அட்வைஸ்
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல்
ரசிகர்களை அதிகம் பாதித்தது என்ன?
அப்துல் கலாம் சொன்னதின் பின்னணி
பாரதிராஜா இறுதி சடங்கிற்கு பிறகு மனைவி வெளியிட்ட உருக்கமான அறிக்கை.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்
பாரதிராஜா குடும்ப விவகாரம்
வைரலாகும் கருத்து