Bharathiraja: கூட இருப்பவர்களையே நம்ப முடியாது... ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி


  • சென்னை: தமிழ் சினிமாவின் மண்வாசனை இயக்குநராக போற்றப்பட்ட பாரதிராஜாவின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிராமத்து வாழ்க்கையை திரையில் உயிரோட்டமாக காட்டிய அவர், இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகர், தயாரிப்பாளர், சிந்தனையாளர் என பல முகங்களுடன் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வந்தார்.

    Advertisement

    பாரதிராஜா மறைவு

    அவரது மறைவு செய்தி வெளியான நிலையில், சமீபத்தில் அவர் அளித்த கடைசி பேட்டியின் சில பகுதிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக சினிமா, அரசியல் மற்றும் மனித வாழ்க்கை குறித்து அவர் பேசிய கருத்துக்கள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

    Advertisement

    அந்த பேட்டியில் பேசிய பாரதிராஜா (Bharathiraja ), "அதிகாரம் எல்லோருக்கும் வரும். ஆனால் அந்த அதிகாரத்துக்குள் எத்தனை சூழ்ச்சிகள், எத்தனை துரோகங்கள், எத்தனை சோதனைகள் இருக்கும் என்று வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு தெரியாது" என்று கூறியிருந்தார்.

    அரசியல்

    மேலும், "அரசியல் என்பது வெளியில் இருந்து பார்க்கும் அளவுக்கு எளிதான விஷயம் கிடையாது. அங்கே யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்பதே பெரிய சவால். கூடவே இருப்பவர்களே சில நேரங்களில் எதிரிகளாக மாறிவிடுவார்கள்" என்று அவர் பேசியிருந்தார். மேலும் வாழ்க்கை பற்றி பேசும் போது.. இந்த பூமி அழகு, பூக்கள் அழகு, மலை அழகு, பெண்கள் அழகு, நீர்வீழ்ச்சி அழகு.. இதெல்லாம் அழகு.. இதை விட்டுட்டு போறோமே என்ற அச்சம்தான்.. உயிர் போவது பயம் அல்ல.. இந்த அழகான உலகத்தை விட்டுட்டு போவதுதான் பயம்... ஐ லவ் யுனிவர்ஸ்.. இந்த பூமியை எனக்கு பிடிக்கும்.. இதை எல்லாம் விட்டுவிட்டு போவது கஷ்டம்.. தினமும் யோசிப்பேன்.. உடல் போயிடும்.. ஆனால் இந்த உலகம்.. இதைவிட்டுவிட்டு போக கூடாது.. இன்னொரு ஜென்மம் இருக்குமா என்று தெரியாது.. இந்த ஜென்மத்தில் இந்த பூமியில் அனைத்தையும் ரசிக்க வேண்டும்.. என்று குறிப்பிட்டு இருந்தார்.

    Advertisement

    சினிமா குறித்து பேசும்போது, "சினிமாவிலும் போட்டி இருக்கிறது, பொறாமை இருக்கிறது. ஆனால் எந்த துறையிலும் இருப்பது போலத்தான் இங்கும் இருக்கும். நாம் நம்ம வேலையை நேர்மையாக செய்து கொண்டே போனால் யாராலும் நம்மை பாதிக்க முடியாது" என்ற அவரது வார்த்தைகள் தற்போது மீண்டும் கவனம் பெற்று வருகின்றன.

    பாரதிராஜா பழைய பேட்டி

    பாரதிராஜா என்ற பெயர் வெறும் இயக்குநரின் பெயர் மட்டுமல்ல. '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', 'மண் வாசனை', 'அலைகள் ஓய்வதில்லை', 'முதல் மரியாதை', 'கருத்தம்மா' என தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றிய பல படங்களின் அடையாளமாகவும் அது திகழ்கிறது.

    Advertisement

    இன்று அவரது மறைவு செய்தியை கேட்டு ரசிகர்கள் மட்டுமல்ல, திரையுலக பிரபலங்களும் அதிர்ச்சியில் உள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் அவரது பழைய பேட்டிகள், புகைப்படங்கள் மற்றும் திரைப்படக் காட்சிகளை பகிர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    "மண் வாசனையை திரையில் காட்டிய மனிதர் இன்று மண்ணோடு கலந்துவிட்டார். ஆனால் அவர் உருவாக்கிய கதைகளும் கதாபாத்திரங்களும் தமிழ் சினிமா இருக்கும் வரை உயிரோடு இருக்கும்" என ரசிகர்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

    ஒரு தலைமுறைக்கு கிராமத்தைக் காட்டிய ஆசிரியர்... பல நடிகர்களுக்கு அடையாளம் கொடுத்த குரு... தமிழ் சினிமாவுக்கு புதிய மொழி கற்றுக் கொடுத்த படைப்பாளர்... அந்த பாரதிராஜா இன்று இல்லை என்றாலும், அவரது படைப்புகள் என்றென்றும் பேசிக்கொண்டே இருக்கும்.

    English Summary

    The passing of legendary filmmaker Bharathiraja has left the Tamil film industry and millions of cinema lovers in deep mourning. Widely celebrated as the filmmaker who brought the fragrance of rural Tamil Nadu to the silver screen, Bharathiraja's influence on Tamil cinema remains unparalleled.In the wake of his demise, portions of one of his final interviews have resurfaced online and are being widely shared by fans and film enthusiasts. The veteran filmmaker’s reflections on power, politics, cinema, and human relationships have struck an emotional chord with many viewers.