சென்னை: தமிழ் சினிமாவின் மண்வாசனையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு செய்தி ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிராமத்து வாழ்க்கை, காதல், மனித உறவுகள், சமூக உண்மைகள் என பல பரிமாணங்களை திரையில் உயிர்ப்பித்த அந்த மாபெரும் படைப்பாளி இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர் விட்டுச் சென்ற படைப்புகள் என்றும் பேசிக்கொண்டே இருக்கும்.
இந்த நிலையில், பாரதிராஜா தனது கடைசி காலங்களில் அளித்த பேட்டிகளும், மேடை பேச்சுகளும் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, "இன்னும் நிறைய கதைகள் சொல்லணும்" என்று அவர் கூறியிருந்த வார்த்தைகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
80 வயதைக் கடந்த பிறகும் சினிமா மீது இருந்த காதலை பாரதிராஜா ஒருபோதும் இழக்கவில்லை. பல பேட்டிகளில் அவர், "என்னால் முடிந்த வரை சினிமாவோடவே இருக்கணும்" என்று கூறியிருந்தார். அவருடைய மகன் இறப்பிற்கு பிறகு அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பேசவில்லை என்றாலும் அதற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூட, "இன்னும் ஒரு நல்ல கதையை படம் எடுக்கணும். நான் பார்த்த வாழ்க்கையை இன்னொரு முறை மக்களிடம் கொண்டு போகணும்" என்று அவர் கூறியிருந்ததார். பாரதிராஜா எப்போதும் சினிமாவை ஒரு தொழிலாக மட்டுமல்ல, ஒரு பொறுப்பாகவே பார்த்தவர். "நான் எடுத்த படங்கள் மட்டும் போதாது. இன்னும் சொல்லப்படாத ஆயிரம் கதைகள் கிராமங்களில் கிடக்கின்றன" என்று பலமுறை அவர் கூறியிருந்தார். அவரது சமீபத்திய பேட்டிகளில் ஒன்றில், "இன்றைய இளைஞர்கள் கிராமத்தை மறந்துவிடக் கூடாது. நம்முடைய வேர் அங்கேதான் இருக்கிறது. அந்த மண்ணின் கதைகளை சொல்ல யாராவது தொடர்ந்து வர வேண்டும்" என்று உருக்கமாக பேசியிருந்தார். சினிமாவின் தற்போதைய நிலை குறித்தும் அவர் கவலை தெரிவித்திருந்தார். தொழில்நுட்பம் வளர்ந்தாலும், மனித உணர்வுகள் குறையக் கூடாது என்றும், கதைகளில் உண்மை இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். பாரதிராஜாவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுவதன்படி, புதிய தலைமுறையுடன் இணைந்து இன்னும் சில படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு கடைசி வரை இருந்ததாக சொல்லப்படுகிறது. ஓய்வு என்ற வார்த்தையை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. சினிமா பற்றி பேசும்போதெல்லாம், ஒரு புதிய இயக்குநரைப் போலவே உற்சாகத்துடன் காணப்பட்டார். தமிழ் சினிமாவுக்கு ராதிகா, ரேவதி, ராதா, ரஞ்சனி, நெப்போலியன் உள்ளிட்ட பல திறமைகளை அறிமுகப்படுத்திய பாரதிராஜா, கடைசி வரை புதிய முகங்களை தேடும் பணியிலேயே இருந்தார். "புதிய திறமைகள் தான் சினிமாவை உயிரோடு வைத்திருக்கும்" என்பது அவரது நம்பிக்கை. இன்று அவரது மறைவு செய்தி வெளியான நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரது பழைய பேட்டிகளை பகிர்ந்து வருகின்றனர். "அவர் கடைசியாக பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இன்று ஒரு நினைவாக மாறிவிட்டது" என்று பலரும் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். ஒரு காலத்தில் கிராமத்தை திரைக்கு கொண்டு வந்த மனிதர், இன்று நினைவுகளாக மாறிவிட்டார். ஆனால் அவர் சொல்ல நினைத்த கதைகளும், அவர் விதைத்த கனவுகளும், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களும் தமிழ் சினிமா இருக்கும் வரை அழியாது. 1977-ல் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவின் முகத்தையே மாற்றியது. அதுவரை ஸ்டூடியோ செட்டுகளுக்குள் இருந்த சினிமாவை, வயல்வெளி, கிராமம், மண் வாசனை இருக்கும் இடங்களுக்கு கொண்டு சென்றவர் பாரதிராஜா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலரின் வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் அது. அதன்பிறகு கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை, கருத்தம்மா என அவர் உருவாக்கிய படங்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாக மாறின. பாரதிராஜா என்ற பெயர் வந்தாலே ரசிகர்களுக்கு இளையராஜாவும் நினைவுக்கு வருவார். பண்ணைப்புரத்தில் தொடங்கிய அந்த நட்பு, தமிழ் சினிமாவின் பொற்கால கூட்டணியாக மாறியது. பல மேடைகளில் "இளையராஜா என் நண்பன் மட்டும் இல்ல, என் உயிர்" என்று பாரதிராஜா கூறியிருக்கிறார். இன்று அந்த நண்பரை விட்டு அவர் பிரிந்திருப்பது, இளையராஜாவுக்கு மிகப்பெரிய இழப்பாக ரசிகர்கள் கருதுகின்றனர். பாரதிராஜா மறைந்திருக்கலாம்... ஆனால் அவர் உருவாக்கிய உலகம் இன்னும் உயிரோடு இருக்கிறது. அதுவே அந்த மகத்தான கலைஞரின் உண்மையான மரபு.பாரதிராஜாவின் ஆசை
அந்த ஆசைதான் இன்று அவரது கடைசி ஆசையாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.பாரதிராஜாவின் பேட்டி
Bharathiraja:
பாரதிராஜா அறிமுகப்படுத்தியவர்கள்
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த
இளையராஜாவுடன் முடிவில்லா நட்பு